அடிகளார் மடல்
429
தேடும் படலம்! முச்சந்திகளில் கூட்டம்! வறுமொழியாளராக வம்பப் பரத்தரொடு கூட்டு: இது என்ன ஒரு வாழ்வா?
இனிய செல்வ, வாழும் மாந்தர் யார் மாட்டும் வேறுபாடின்றி அன்பு காட்டுதல் வேண்டும். அவர் தம் நல்வாழ்வுக்கு நாளும் உழைத்திடல் வேண்டும். அதுவே யோகம்! “ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்றான் பாரதி. இன்று இப்படி யோகம் செய்வார் யாருமில்லை. எங்கும் நிர்வாணமான சுயநலம்; தற்புகழ்ச்சி; தன்னைத்தானே வியந்து கூறிக் கொள்ளல், முதலிய குற்றங்கள் மலிந்துவிட்டன. இனிய செல்வ, பேணுதல் வாழ்க்கைக்குரிய இயல்புகளில் தலையாயது பேண வேண்டியன பலப்பல. முதலில் உடல் நலம், அறிவு நலம் பேணப்படுதல் வேண்டும். அடுத்து மனிதகுல உறவுகள் பேணப்பட வேண்டும். இன்று மனிதகுல உறவுகள் சீரழிந்துள்ளன. இன்று உறவுக்கு அடிப்படை தேவையாகிவிட்டது. தன்னலமுடையார் கூட்டம் ஒரோவழி ஒன்று சேர்கிறது! உண்மை! எத்தனை நாளைக்கு! சில நாட்களுக்கே இந்த உறவு! பின் கெடும். பகையாகமாறும்! இனிய செல்வ, இதுவா வாழ்க்கை? இல்லை! இல்லை!
நம்முடைய செயல் திறனும் பண்பாடும் இழிந்து போகும் நிலை கண்டு நாணவேண்டும். நல்லனவற்றையே நாடும் பண்பு வளர்தல் வேண்டும். யார்மாட்டும் விருப்பும் வெறுப்பும் இன்றிச் செயல்பட்டாகவேண்டும். இவையெல்லாம் பேணிக் காத்துக்கொள்ளாதார் யாதொன்றும் அறியாதார்! பேதைமையுடையார்! என்று வள்ளுவம் கூறுகிறது! இன்று நாம் காண்பதென்ன? பேதமையைத் தவிர வேறு எதைக் காண்கிறோம்!
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்