பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



430


இயலாது. இனிய செல்வ! ஒரோ வழி வளர்ந்தாலும் அது வெறும் தோற்றம்! மாயை! அவ்வளவுதான்.

இனிய செல்வ! பல குழுவாகப் பிரிந்து வாழ்பவர்கள் முரணிய சிந்தனை உடையவர்கள். நல்லவர்களைக் காத்துக் கொள்ள மாட்டார்கள்! மாறாக, மாறாத உட்பகை கொண்டு பழகுவர்! இனிய செல்வ! பகைமையே தீது! அதிலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு என்றும்-பகை, எப்போதும் பகை, அகத்தே எரியும் பகை. ஆதலின் இந்த உட்பகையைப் பாழ் செய்யும் உட்பகை என்றார். இனிய செல்வ! வெளிப்படையான பகையில் நமக்கு அறிவு வளர வாய்ப்புண்டு. அதே பகை உட்பகையாக இருந்து கேடுகளைச் செய்யும். அதனால் பாழ் செய்யும் உட்பகை என்றார்.

இனிய செல்வ! எங்கும் குழுஉ மனப்பான்மை. குழுஉ வழிபட்ட மாறுபாடுகள், தம்முள் முரண்பட்ட நலன்கள் இவற்றின் எதிர் விளைவாகப் போட்டிகள், இவையனைத்தின் காரணமாகவும், ஆங்காங்கு மோதல்கள்! சண்டைகள்! இதனால் நாட்டின் அவசிய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட முடிவதில்லை. நாள்தோறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சனைகள்! இதுதான் இன்றைய நமது நாடு. பஞ்சாபில் படுகொலைகள் வழக்கமாகி விட்டன. காஷ்மீரில் என்ன நடக்கிறது? புரியாத புதிர், ஏன் இந்த அவலம்? நாட்டின் நலன் காத்தல் என்ற பொது நோக்கு மக்களிடத்தில் வளரவில்லை! வளர்வதற்குரிய முயற்சிகளையும் அரசு செய்யவில்லை! சமுதாய இயக்கங்களும் செய்யவில்லை. ஆதலால் வரவர மக்களின் தரத்தில் அரிமானம் ஏற்பட்டு வருகிறது. கயமைத்தனங்கள் வளர்ந்த வண்ணமுள்ளன. இனிய செல்வ! இதில் என்ன வேதனை என்றால் சமூக அங்கீகாரத்துடன் சமூக மேம்பாடு, ஜனநாயகம் என்ற பெயரில் நடப்பது தான்.