பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



8. அன்பு ஈனும் ஆர்வம்

மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் - ஆற்றலுடையது. "ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். "ஒத்தறிவான்' என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே பலர் விரும்புவர். இவர்களின் ஆன்மாவில் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆதிக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

தூய அன்பு விரிவடையும், தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும், அவர் தம் தேவையறிந்து உதவும், அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை.

"அன்பினை எடுத்துக் காட்ட
அளவிலா ஆர்வம் பொங்கி"

என்பது சேக்கிழார் திருவாக்கு.