பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



477


அனைத்தும் குறைவறப் பெற்றவன் மனிதனா? அதுவும் இல்லை. திருவள்ளுவர் மறுக்கிறார். "உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்று" என்பது திருக்குறள். மானுடம் அற்புதமான படைப்பு. இனிய செல்வ, மனித உடம்பில் உள்ள பொறிகள், புலன்கள் ஆகியவை, அவை இயங்கத் துணை செய்யக் கூடிய சதை முதலிய அமைப்புக்கள்! அம்மம்ம, அற்புதம்! அற்புதம்! ஒன்றன் பணியில் பிறிதொன்று தலையிடுவதில்லை. ஆனால் ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்கி உயிரைக் காப்பாற்றுகின்றன; இயக்குகின்றன. இந்த இயக்கத்தில் ஒர் ஒழுங்கு (Order) நிலவுகிறது. முறை பிறழாத நிகழ்ச்சியும் (Consistancy) நிலவுகிறது. ஏன் இவ்வளவு பொறி நுட்பங்கள்? ஆற்றல் வாய்ந்த அமைப்புக்கள்?

மானுடம் புவியை நடத்தும் சக்தியைக் கொண்டது. மானுடம் படைப்பாற்றல் உடையது. இனிய செல்வ, எத்தனை மனிதர்கள் புவியை நடத்துகின்றனர்? இன்று புவியல்லவா தூக்கமுடியாத மனிதச் சதைப் பிண்டங்களைத் தூக்கிக் கொண்டு செல்கிறது; மனிதன் சிந்திப்பவன். ஆனால் அவன் சிந்திக்க மறுக்கிறான்! ஏன் சிந்திக்க மறுக்கிறான்? சில நூறு சம்பாதிக்கிறான். அவனைச் சுற்றி முகஸ்துதி செய்கிறவர்கள் கூடி விடுகின்றனர். உடனே அவனுக்கு நினைப்பு, தான் பெரிய மனிதன் என்று! அவன் எதையும் செய்யத் துணிகின்றான். அதீதத்தினுடைய எல்லை வரையில் பேசுகிறான்! கடைசியாக நான்முகன் தலையில் முருகன் குட்டியது போலக் குட்டித்தான் தீரவேண்டியிருக்கிறது! வேறு வழியேயில்லை.

இனிய செல்வ, இந்த மாதிரியான மனிதர்களைத் திருவள்ளுவரே கைவிட்டு விட்டார். ‘கயவர்கள்’ என்று கூறிக் கரும்புபோலக் கொன்று பயன் கொள்ளுமாறு கூறுகிறார்.

இனிய செல்வ, இன்று இத்தகைய கயவர்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது. ஏன், இன்றைய உலகியலை நடத்துபவர் யார்? இந்தக் கயவர்கள் தான்! நல்லவர்கள் செயலற்ற