திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்
111
கருதிப் பிறர் பொருளை விரும்பாதிருத்தல் நல் வாழ்க்கைக்குத் துணை செய்யும்.
‘சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.’
அறத்தினால் வரும் இன்ப அன்பினை விரும்புபவர்கள் சிறு பொழுதே அனுபவிக்கும் சாதாரண இன்பத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்து பிறர்பொருளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
“சிற்றின்பம்” என்றது அளவுகளின் பாற்பட்டதன்று. எளிமைத் தனமான இன்பம் இளிவரவானது. “மற்றை இன்பம்” என்றது உழைப்பு, ஆற்றல், அன்பு, அறம், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும்.
“சிற்றின்பம்” என்பது ஆன்மாவுக்கும் அறிவுக்கும் புலன்களுக்கும் தொடர்பின்றிப் பொறிகளால் மட்டுமே துய்ப்பது. பொறிவழிப்பட்ட இன்பம் கொச்சைத் தனமானது. தவிர்த்துப் பழகவேண்டும். தனக்கு இன்பத்தையும் மற்றவர்க்குத் துன்பத்தையும் தரக்கூடியதாக அமையும் இன்பமும் சிற்றின்பமேயாம். ஆதலால், எப்பொழுதும் அறிவாலும் உணர்வாலும் துய்த்து மகிழும் இன்பத்தையே நாடவேண்டும். பொறிகளைத் தனது அறிவாண்மையின் வழி இயக்குதல் வேண்டும்.
“மற்றின்பம்” என்பது ஆன்மாவும் அறிவும், உணர்வும் ஒருங்கிணைந்ததாகவும் தாம் இன்புறும் நோக்கத்தோடு மட்டுமின்றி மற்றவர்களையும் இன்புறுத்தும் தன்மையுடையதுமாகும்.
நாம் எத்துறை வாழ்க்கையை மேற்கொண்டாலும் அவ்வாழ்க்கையில் ஆளுமையைப் பதித்து, அறிவொடும் உழைத்து வாழும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.