திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்
119
நாம் பயனற்ற சொற்களைத் தவிர்க்கவேண்டும் என்று கருதி, முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சிலர் நம்மீது ‘பெருமை பாராட்டிக் கொள்கிறோம்’ என்று தவறாக எண்ணி வருத்தப்பட நேரிடும். இதனால் சிலருடைய மனத்தொல்லைகளும் பகையுங்கூட வரக்கூடும். இதைத் தவிர்க்க யாரையும் கண்டவுடன் அவர்களை மதிக்கும் உணர்வுடன் மலர்ந்த முகங்காட்டி நலம் முதலியன கேட்பதன் மூலம் இந்தத் தொல்லையைத் தவிர்க்கலாம்.
1. பயனில சொல்லாமையால் காலம் வீணாவது தவிர்க்கப்படும்.
2. பயனில சொல்லாமையால் வதந்தி, கோள், பகை மூட்டும்சொல், பழி தூற்றல் முதலியவற்றைத் தவிர்க்கலாம்.
3. பயனில சொல்லாமையின் மூலம் மற்றவர்களுக்குப் பழி தருதலையும், தாம் பழி சுமத்தலையும் தவிர்க்கலாம்.
4. பயனுடைய சொற்களைத் தேர்ந்து சொல்லுதல்மூலம் காலம் மிஞ்சும்; வாழ்க்கை பயனுடையதாக அமையும்.
5. யோக நெறிப்படி வாணாள் வளரும்.
பயனில சொல்லாமையாகிய இந்த ஒழுக்கத்தைத் திருக்குறள் அறமாகவும் நயன்மை (நீதி)யாகவும் அறிவுடைமையாகவும் எடுத்துக் காட்டி விளக்குகிறது.
‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.’
பலரும் வெறுக்கத்தக்க வகையில் பயனற்ற சொற்களைச் சொல்வோர் அனைவரும் எல்லாராலும் இழிவாகக் கருதப்படுவர். காலக்கேடு கருதியும் கடமைச் சிதைவுகள் ஏற்படுதல் எண்ணியும் பயனற்ற சொற்களேயாயினும் அதன் உள்ளடக்கமாகிய எள்ளல், பழி தூற்றல் ஆகிய