திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்
121
’பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.’
பயனற்ற சொற்களை விரும்பிச் சொல்பவன், மனிதனல்லன்; மக்களுள் பதராவான்.
நெல்லில் உள்ளீடில்லையானால் பதர், மனிதரில் அறிவாகிய உள்ளீடில்லையானால் பதர். அறிவற்றவரே பயனற்ற சொற்களைச் சொல்வர்.
‘நயனில சொல்வினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.’
அறிவுடையோர் சோர்வினால் ஒரோவழி நேர்மையற்ற சொற்களைச் சொல்லினும் ஏற்றுக் கொள்ளப்பெறும். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் பயனற்ற சொற்களைச் சொல்லுதல் ஏற்றுக் கொள்ளப் பெறமாட்டாது.
‘சொல்லினும் சொல்லுக’ என்றமையால் சொல்ல மாட்டார் என்பதே கருத்து. நேர்மையற்ற சொற்கள் ஒரோ வழி எல்லைக்குட்பட்ட தீமையைத் தரும். பயனற்ற சொற்களைச் சொல்லுதல் அங்ஙனமன்று; பல மடங்கு தீமையைத் தரும். அதனால், நேர்மையற்ற சொற்களைவிடப் பயனற்ற சொற்கள் அதிகத் தீமை பயப்பன என்பது பெறப்படுகிறது.
‘அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.’
அறிதற்கரிய பயன்களை ஆராய்ந்தறியும் இயல்புடைய அறிவோர் மிகுபயனற்ற சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.
பயனுடைய சொற்களாய் இருத்தல் நன்று. அதனினும் நன்று, அதிகப் பயன் விளைவிக்கும் சொற்கள். அதாவது ஒரோ வழி குறைவான பயன் தருதலைவிட நெடிய