பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



173



உலகத்திலே இந்தப் பொருளாதாரம் என்பது ஒரு பெரிய சித்தாந்தமாக-தத்துவமாக வளர்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட திருவள்ளுவர் நல்ல பொருளியல் நுட்பங்களை அறிந்தே பேசியிருக்கிறார். அந்த நுட்பங்களையெல்லாம் அறிந்தால்கூட நமது நாட்டிலே செல்வம் செழிக்கும்.

திருவள்ளுவர் பொருளை ஈட்டுவதைப்பற்றிச் சொல்லும்பொழுது,

‘இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.’

385

என்று சொன்னார். இயற்றல் என்பது மிக நுட்பமான சொல். நமக்கு இயற்றுகிற குணமும் இப்பொழுது கிடையாது.

கோடி வீட்டுக்காரர் ஒரு கடை வைத்தார். நல்ல வியாபாரம் நடந்தது என்றால் பக்கத்து வீட்டுக்காரரும் அதே வியாபாரம் நடத்த எண்ணுகிறார். அவருக்கு இன்னொரு புதுத் தொழில் காண்பதற்கு விருப்பமே கிடையாது. அவருக்கு அதிலே லாபம் வந்ததா? நாமும் அதைச் செய்வோம் என்கின்ற எண்ணம் வருகின்றது.

நம்முடைய நாடு இப்பொழுது போய்க்கொண்டு இருப்பதைப் பார்த்தால், உலகப் பொருளியல் நிபுணர்கள், சாக்ரட்டீஸ் போன்ற சிறந்த அரசியல் மேதைகள் “ஒரு நாட்டிலே வியாபாரம் அதிகம் பெருகினால் அந்த நாடு அழியும்” என்று கூறியது உண்மையாகி விடுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

அந்த நாட்டிலே வர்த்தகங்கள் இருக்கலாம். அவன் வியாபாரத்திற்கும் வர்த்தகத்துக்கும் இடையே வேற்றுமை பிரிக்கிறான். நெடிய தொலைவிலிருந்து, இல்லாத பொருளைக் கொண்டுவந்து கொடுப்பது வர்த்தகம்.