பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இங்கே இருக்கின்ற அல்லது உற்பத்தியாகின்ற பொருட்களை நெடிய தொலைவில் விற்பது வர்த்தகம்.

மாம்பலத்திலே உள்ள பொருளை மயிலாப்பூரிலே விற்பதும், மயிலாப்பூரிலே இருக்கின்ற பொருளை மாம்பலத்திலே விற்பதும் வர்த்தகமாகாது; வியாபாரமாகும்.

இதில் பெரும்பாலும், புதுப் பணம் உற்பத்தியாகாமல், கையிலே இருக்கின்ற பணம் சுழன்றுகொண்டிருக்கும். இயற்றலும் என்று வள்ளுவர் கருதுகின்றபோது, புதுப் பொருளாதாரச் சித்தாந்தப்படி, புதிய தொழிற் புரட்சிகளை-புதிய தொழில் அமைப்புகளை-உருவாக்கிப் புதிய வழியிலே பொருளீட்ட வேண்டும்.

பொருள் வருவதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அரசுக்கு அதுதான் வேலை என்று திருவள்ளுவர் நினைக்கிறார்.

ஏதோ வந்து கொண்டிருக்கின்ற ஒரே துறையிலே வருவாய் வந்தால் போதாது. ஆக புதிய வழிகளிலே புதிய புதிய தொழில்களிலே செல்வம் வந்து குவியும்படியாகச் செய்யவேண்டும்.

‘ஈட்டல்’-அவற்றை ஒழுங்காகக் கொண்டுவந்து சேர்த்தல்.

‘காத்தல்’-கொஞ்ச நாளைக்குக் காக்கவேண்டும்.

செல்வம் வர வர உருண்டுகொண்டு இருந்தால், திரும்பச் செல்வம் வருகின்ற வழியை இழந்துவிடுகின்றது.

ஒரு நூறு ரூபாய் ஒருவரிடத்திலே இல்லாமல் நூறு பேரிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் இருந்தால், அந்தச் செல்வத்திற்குத் திரும்பி வரும் சக்தி இல்லாமல் போய்விடுகிறது.