பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வகுத்தல் என்ற அமைப்பிலே சொன்ன அழகை நாம் பார்க்கின்றோம்.

அடுத்து, நம்முடைய அமைப்பிலே அவருக்கு இருப்பது நாட்டின் நில வருவாய். இப்பொழுது பெரும்பாலும் நாட்டிலே நில வருவாய்தான் அதிகம். நம்முடைய நாட்டின் ஆட்சித் துறையிலேகூட வேளாண்மைத்துறை மிக முக்கியமான உயிர் நாடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

திருவள்ளுவர் "வாரி பெருக்கி" என்பதை அரசைப் பார்த்துச் சொன்னார். நல்ல நீர் மராமத்து, குடி மராமத்துக்களைச் செய்து, தண்ணீர் வளத்தைப் பெருக்கும்படியான காரியங்களைச் செய் என்பதைத்தான் வள்ளுவர்,

"வாரி பெருக்கி வளம்படுத்து"

என்றார்.

இந்த வேளாண்மை என்ற தொழில் இருக்கிறதே அதிலே மழைக்கு-தண்ணீர் வளத்திற்கு வாரி என்று, பெயர். இந்த வாரி வேலைகளை-கால்வாய் வேலைகளைக் காலா காலத்திலே முறையாகச் செய்து, அவைகளைத் தூய்மைப்படுத்தித் தண்ணீரை நிறையக் கொண்டுவந்து சேர்த்து, வளம்படுத்த வேண்டும். நிலங்களை வளப்படுத்த வேண்டும். போதுமா? அதற்குப் பிறகு பூச்சிபொட்டு அழிவு வருகிறதே! அதற்கு? உற்றதை ஆராய்ந்து, உரியதைச் செய்து, நீர்வளம் பெருக்கி நிலவளம் காக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, பயிர் அழிந்துவிடாமல் இருப்பதற்குரிய காவலும் வேண்டும். ஆகவே, ஒரு நீர்ப் பாசனத்துறை, விவசாயத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்தக் குறள் இருந்தால்-இந்த மூன்று வேலைகளையும் ஒழுங்காகச் செய்தால், வேளாண்மைத்துறையில், நிச்சயமாக உணவுத் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். இப்பொழுது வாரி பெருக்குவது என்பதே கிடையாது.