பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



193



பெர்னார்ட் ஷா ஒரு தடவை வேடிக்கையாகச் சொன்னார். ‘சமயத்தை எல்லோரும் திருத்த முயல்கிறார்கள். சமய உலகத்தையே களை பிடுங்க நினைக்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு கவலை. களை பிடுங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இறங்குவதற்கு முன்னாலே களை எது, பயிர் எது என்று தெரிந்து கொண்டு இறங்கினால், அவர்கள் பயிரைக் களை என்று நினைத்துக்கொண்டு பிடுங்காமல் இருக்கலாம். ஒருகால் பயிரைப் போய்க் களை என்று நினைத்துப் பிடுங்கிவிட்டால், சாகுபடிக்காரருக்கு ஒன்றும் மிச்சமில்லாமல் போய்விட்டால், என்ன பண்ணுவது?’ என்றார்.

அதுபோலத் தண்டனை எங்கே, எப்போது, எதற்கு, யாருக்கு என்று இல்லை. “வாச்சான், போச்சா”னாகச் சிலருக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது. சிலர் தப்பித்துக் கொண்டுவிடுவார்கள். நன்கு கண்ணுக்குத் தெரிந்து கொலை செய்தவர்கள், வெளியே திரும்பி வந்து விடுவார்கள். ஒன்றும் செய்யாத-அறியாதவர்கள் உள்ளே போய் மாட்டிக் கொள்வார்கள்.

இது, ஆட்சித் திறமையிலே, நல்ல துணுக்கமான அறிவினாலே பார்க்க வேண்டிய இடங்கள்.

ஆக, “கொலையின் கொடியாரை வேந்து ஒறுக்க வேண்டும்.” அது சாகுபடிக்கு-வேளாண்மைத் தொழிலுக்குக் களை பிடுங்குவது எவ்வளவு இன்றியமையாத தொழிலோ, அது போலச் சமுதாயத்திற்கு. ஆனால் மீண்டும் புதிய அரசியல் பாதையிலே பார்த்தால், இந்தத் தண்டனை என்பதுகூடத் திருத்துவது. அதை இன்னொரு முறையில் சிறப்பாகச் சொல்லுவார்கள். இந்தத் தண்டனைகள் கொடுக்கிறபோதெல்லாம், அரசு கொடுக்கிற தண்டனைகூட, அது உயிருக்கு அல்ல; அது உடம்புக்குத்தான்! இந்த உடம்பு இந்தத் தப்புப் பண்ணிவிட்டது. அவனுடைய மனத்தை

தி.IV.13.