பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கும். ஆனால் நம்முடைய மனப்போக்கில் இன்றைக்குக் கடவுளையும் கூட நம்முடைய சாட்சிக்கு அழைத்துக் கொள்கிறோம். இந்த முயற்சியை நாம் தவறாகப் பயன் படுத்தக்கூடாது. கடவுளை நம்முடைய வாழ்க்கைக்குத் துணையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்முடைய துன்மார்க்கமான வாழ்க்கைக்குத் துணையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று எழுத்துக்களுக்கு அகரம் முதலாக இருப்பதைப் போல, உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான். அவன்தான் முதற் பொருளாக இருக்கிறான் என்பதுதான் பொருள். இந்த அடிப்படையில் உலகத்திற்கு முதலாகவும், வாழ்க்கைக்கு முதலாகவும் இருக்கின்ற கடவுளை, நினைந்து வாழ்த்தி, அந்தக் கடவுளை நாம் நினைந்த வடிவத்தோடு, நமக்கு எந்த பூர்த்தி, எந்தத் திருமேனி, எந்தப் பெயர் நமக்கு உவப்பாக இருக்கிறதோ, அந்த உவப்பான திருப்பெயரில் எது என்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய வாழ்க்கையில், நீங்கள் வழிபாடு செய்கின்ற பொழுது, இத்தனை நாட்கள் நீங்கள் உண்மையாகவும், முறையாகவும் வழிபட்டிருந்தால், உங்களுக்குச் சில பெயர்களைக் கேட்கின்ற பொழுது, நம்மை அறியாமல் ‘உழுவலன்பு’ பெருக்கெடுக்கும். அது திரு முருகனாக இருந்தால் நல்ல மூர்த்தி எந்தப் பெயராக இருந்தாலும் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; திருவுருவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கோலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஏதோ ஒன்று நாம் சிந்திப்பதற்குப் பற்றுக் கோடாகத் தேவைப்படுகிறது.

வாணவெளியில் உலா வருகின்ற ஒலி அலையை வாங்கிக் கொடுக்க ஒரு வானொலிப் பெட்டி தேவைப்படுகிறது. அதுபோல இறைவனோடு நம்மை இணைப்பதற்கு ஏதோ ஒரு கருவி ஏதோ ஒரு செயல்முறை நமக்குத் தேவைப்படுகிறது. அந்தச் செயல்முறை நாம் இன்னும்