பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரை, விரும்பாத போக்கும் எதிர்பாராத தாக்குதலும் எதிரிகளால் ஏற்படலாம். எனவே நல்ல படை பலமும் தேவை என்கிறார்.

ஆண்டவன் வரம் கொடுத்தாலும் பணப் பெட்டியின் மீது பித்துக்கொண்ட பூசாரிப் புரோகிதர்கள் எனும் நந்திகள் சமய வாழ்க்கையைச் சடங்குத் தன்மையுடையதாக மாற்ற வல்லார்க்குச் சாமரம் வீசுகின்றனர்.

‘நியாயம் வழங்க வேண்டிய அரசியல், வாய்ப்புடையார் வாயிலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழிலாக மாறிவிட்டது. எங்கு நாட்டின் நீதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ அங்கு அரசை ஆட்டிப்படைக்கின்ற தனியார் நிதிக் குவியல் தோன்றும்’ என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. திருவள்ளுவ நெறிவழி மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கூறுகளை ஆழமாகச் சிந்தித்து. அற்புதமாக நமது மகாசந்நிதானம் தமிழ்ச் சமுதாயத்திடம் ஒப்படைத் துள்ளார்கள். இந்தச் சிந்தனைப் பெட்டகத்தைச் செயலாக்க வேண்டியது நமது கடப்பாடு.

பல குழுக்களாக விரவிக்கிடக்கின்ற தமிழ் இனத்தை ஒருமைப்படுத்த திருவள்ளுவப் பெருமான் முயன்றதைப் போல, பல பொழிவுகளாக விரவிக்கிடந்த கருத்துப் பெட்டகங்களைத் தொகுப்பு நூலாக மாற்றும் முயற்சியில் மணிவாசகர் பதிப்பகம் வெற்றி கண்டுள்ளது. பதிப்புக் கலையில் முத்திரை பதித்த வித்தகர் மெய்யப்பன், இதிலும் முத்திரை பதித்துள்ளார்.

இந்நூல் எழுத்துக் கருக்கொண்ட நாள் முதல் இன்றுவரை அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமை நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுருவைச் சாரும். பல வகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமை ஆற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் தெ. முருகசாமி, பேராசிரியர் நா. சுப்பிரமணியம், ஆதீனப் புலவர் க. கதிரேசன், எழுத்துச் செம்மல் பெரியபெருமாள் போன்றவர்களின் பணிகள் அளப்பரியன; எண்ணி எண்ணிப் போற்றும் கடப்பாட்டுக்குரியன.

இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை நல்கிய முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வரிய நூலின் கருத்துக்களை, சிந்தனைப் பெட்டகங்களைச் செயலாக்க மகாசந்நிதானம் திருநாமத்தைச் சிந்தித்துப் பயணம் செய்வோம்!

இந்நூலை வாசிப்பதோடு நிறுத்திவிடாது அருள்நெறித் தந்தையின் சிந்தனைகளைச் செயலாக்குவதே, இந்நூலுக்கு அணிவிக்கின்ற பொன் அணியாகும். அருள் நெறித் தந்தையின் கனவு, நனவாகக் கற்றவழியில் கடமை ஆற்றுவோம்.