பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



விருந்தினர்கள் - புதியவர்கள்; முன்பின் அறிமுகம் ஆகாதவர்கள். இது மரபுவழிக் கருத்து. வீட்டிற்கு வரும் விருந்தினரை இனிய முகத்துடன் வரவேற்று உணவளித்து உபசரிக்க வேண்டும். உணவைவிட உபசரணை முக்கியம். உபசரணையின் தரம் குறைந்தால் விருந்தினர் வருந்துவர்; விருந்தினரை உபசரிப்பது ஒரு பண்புமட்டுமல்ல; கலையும் கூட; இல்லற வாழ்க்கையின் கடமை வரிசையில் விருந்தோம்பலும் இருக்கிறது.

செல்வி! நீ எப்போதும் விருந்தினரை வரவேற்று உபசரிக்க ஆயத்தமாக இரு! குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பண்டங்களைச் சேகரித்து வைத்துக்கொள்! கணவன் வீட்டிலிருக்கும் பொழுது விருந்தளிப்பது என்பது முறை. தவறுகள் நிகழாமல் தவிர்க்க இது அவசியம். கூடுமானவரையில் விருந்தினரை அழைப்பது, குறித்த நாளில் குறித்த நேரத்தில் வரும்படி அழைப்பது ஆகிய நற்பழக்கங்களை நீயும் பழகிக்கொள்; விருந்தினரையும் பழக்கு.

நமது நாட்டில் விருந்தினர் திடீரென்று வந்து விடுவர். கணவனும் வீட்டில் இல்லை. என்ன செய்வது? அறச்சங்கட மாகிவிடும். எனவே, ஒரு மாதத்தில் சில நாட்கள் விருந்தினர்களுடன் இருப்பது, கூடி உண்பது என்ற நல்ல பழக்கத்தை நடைமுறைப்படுத்தலாம். இஃது ஒரு நல்லமுறை. விருந்தோம்புதல் தலைமைப் பண்பு; தலையாய கடமை; விருந்தோம்பல் மூலம் சுற்றம் விரிவடையும்; மன அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியுடன் வாழலாம்! விருந்தோம்புக! விருந்தோம்புதலைக் கடமையாகக் கொள்க!

4

நீ, குடும்ப அடிப்படையிலும் சுற்றத்துச் சூழ்நிலையிலும் பலருடன் கூடி வாழும் நிலை உருவாகியிருக்கிறது.