பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏன் திருக்குறள் பேரவை?



345


அரசியல் சாத்திர நூல்; அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் பெருநூல்; மெய்யுணர்வினை நல்கும் ஞானநூல்; மனித வளர்ச்சியின் பருவம் தோறும் துணைநின்று வழிநடத்தும் வாழ்வு நூல்; உலகப் பொதுநூல். திருக்குறள் கடவுளை நம்புகிறது. ஆனால் கடவுளுக்காகச் செய்யப்பட்ட நூலன்று; மதச்சார்பான நூலன்று. திருக்குறள் அரசனை நம்புகிறது. ஆனால், அரசனுக்காகச் செய்யப்பட்ட நூலன்று. திருக்குறள் ஓர் அரசியல் நூலே. மக்களின் உரிமைகளுக்கு அரண் செய்து நிற்கும் நூலே. கடவுளையும் அரசனையும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்காகவே தோன்றும் இலக்கியங்கள் மக்களை மறந்து விடுவனவாக அமைந்து விட்டன. திருக்குறள் மனிதனை முன்னிலைப்படுத்துகிறது. ஆதலால், திருக்குறள் புதுமை நிறைந்தது; பொதுமை தழுவியது.

திருக்குறள் மனித சமுதாயத்தைச் சீருற வளர்த்து அவ்வழி அந்தச் சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குடும்பத்தைச் செழுமைப்படுத்தி அதன் பயனாகத் தனிமனிதனைச் செழுமையாக வளர்த்து மீண்டும் சமுதாயம் பயனுறும் வகையில் சமுதாயத்தை இயக்கும் நூல். மனித குலத்தை வேறுபடுத்திப் பகைவளர்க்கும் எந்த ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாதது. திருக்குறளுக்குரிய ஒரே பெருமை. நாடு, மொழி, இனம், சமயம் ஆகிய வேறுபாடுகளைத் திருக்குறள் தழுவவில்லை. மாறாக, முற்றாக ஒதுக்கியிருக்கிறது. நாட்டுப்பற்றும் கூட எல்லை கடக்கும்பொழுது பகையை வளர்க்கிறது. என்நாடு சிறந்தது எனப் போராடத் தொடங்குகின்றனர். திருக்குறள் நாட்டின் இலக்கணம் பேசுகிறது. ஆனால், அது தமிழ்நாட்டைப் பற்றிப் பேசவில்லை. திருக்குறள் உலகம் தழீஇய ஒட்பம் உடையது.

திருக்குறள், வாழ்க்கையில் பிறந்த வாழ்வியல் நூல்; திருக்குறள் வாழ்க்கையோடிசைந்த அறநூல். திருக்குறள் சமய