பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 “இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”

அதாவது என்னாளும் வறியார்க்கு இல்லை என்று கூறி இயைவதைச் செய்யாது, கரத்தல் மாட்டாது - நெஞ்சம் வற்புறுத்தலின் நம் காதலர், காதலித்தது, நம்மினும் காட்டில் பொருளேயாகும் என்பதாகும். இல்லை என்று சொல்லியே பழக்கம் இல்லாத நெஞ்சம் என்று இங்கு குறிப்பிடுவது தமிழ்ப் பெருங்குடியில், வழி வழியாக வளர்ந்திருக்கின்ற ஈகைப்பண்பைக் குறிக்கின்றது. அது மட்டுமின்றி “இயல்வது கரவேல்” என்ற பழமொழிக்கு ஒரு புதிய ஆழமான கருத்தை இப்பாடல் தருகிறது. வழக்கில் பெரும்பாலும் இயல்வது என்ற சொல்லுக்குப் பொருளுடைமை மாத்திரமே குறித்துப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது முற்றிய பூரண கருத்தல்ல. பொருளில்லாது இருக்க, முயன்று தேடும் வலிவுடையராய் இருந்தும், இரவலர்க்குப் பொருள் இல்லை என்று கூறுவதும் இயைவது கரத்தலே ஆகும். இங்ஙனம் கொடுத்துக் கொடுத்துப் பழகுகிறவர்களுக்கு வாங்குகிறவர்கள் வராது போனால் அந்நிலையைக் கொடுந்துன்பமாகவே கருதுவார்கள். இக்கருத்தைக் குறுந்தொகைக் கவிதை ஒன்று அழகாக விளக்குகிறது. தலைவன் பொருள் வயிற்பிரிய நினைக்கின்றான். அப்பிரிவினையை முன் கூட்டியே தலைவியிடம் உணர்த்துகின்றான். அது போது தலைவன் நீ தனியே இருந்து வருந்தும்படி நின்னைப் பிரிந்து நெடுங்காலம் இருக்கமாட்டேன். அப்படி இருப்பேனாயின் இரப்போர் வருதலில்லாத வறிய நாட்கள் பலவுளதாகுக என்று கூறுகின்றான்.

இக்கருத்தை விளக்குகின்ற பாடல் கீழ்வருமாறு:

“மெல்லியல் அரிவை நின் நல்லகம் புலம்ப
நிற்றுறந்து அமைகுவனாயின் எற்றுறந்து