பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதை விளக்கம்

97


இரவலர் வாரா வைகல்
பலவாகுக யான் செலவுறு தகவே”

மிகச்சிறிய பாடலில் உயர்ந்த அறத்துறைக் கருத்தை விளக்கும் இக்கவிதையின் சுவை படித்துப் படித்து இன்புறத் தக்கது.

தமிழகத்தில் புலமை சான்ற தமிழ்ப் பெரியோர்கள் புரவலர்களிடம் சென்று பரிசிலும் கொடையும் பெறுவது வழக்கம். அப்படி வாங்கும் போது வாங்குகிறவர்கள் என்பதற்காகத் தன்னுடைய தகுதி குறையாமலே, தன் மதிப்புடன் வாங்குகிற மரபே இருந்து வந்திருக்கிறது. யாராவது பரிசில் கொடுக்க காலத்தை நீட்டித்தால் கூட புலவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வல்வில் ஓரியை கழைதின் யானையார் பாடிய பாடல் ஒன்றில் மேற்சொன்ன கருத்து பெறப்படுகிறது. பாடல் அழகாகவும், அமைதியாகவும், அதே காலத்தில் பொருட்செறிவோடும், பண்பியல் அடிப்படையில் இடித்துரைக்கும் துறையிலும் சிறந்தமைந்து இருக்கிறது. கவிதையைக் காண்போம்.

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று:
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று:
தெண்ணீர்ப் பரப்பின் இழிழ்திரைப் பெருங்கடல்
உண்ணீர் ஆகுப நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உனக் கலங்கிச்
சேறோடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஒரி விசும்பில்