பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன.

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடி பயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறும் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அடிகளார் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேணவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்நாடு செய்த தவப்பயனால் 1925இல் தோன்றி 70 ஆண்டு காலம் தமிழகத்திற்குப் பல்வேறு பணிகள் வாயிலாகக் கடமை ஆற்றிய நாட்டுத் துறவியாவார்.

தவத்திரு அடிகளாரைப் புரட்சித்துறவி என்றும், மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என்றும் நாடு கருதும்.

அடிகளார் எழுத்துக்கள் அனைத்தையும் நூல்வரிசையாகத் தொகுக்கும் போது ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களுக்குக் குறையாமல் 15 தொகுதிகளாக மொத்தம் சற்றொப்ப 6000 பக்கங்கள் அளவில் விரிந்தன. தம் 50 ஆண்டுப் பொதுவாழ்வில் அடிகளார் எழுதிய 60 நூல்களையும் பதிப்பாசிரியர் குழு 5 தலைப்புக்களில் வகைப்படுத்தியது. நூற்றொகுதி அனைத்தையும் ஒருசேர வைத்து நோக்கும்போது அடிகளார் மிகச் சிறந்த நூலாசிரியராகச் சிறப்பதை நாம் உணர்கிறோம்.

1999 டிசம்பர் திங்களில் முதல் தொகுதி முகிழ்த்தது. 2001 நவம்பரில் தொகுதிகளின் அச்சுப் பணி முடிந்தது. திருக்குறள் பற்றி மட்டும் அடிகளார் கட்டுரைகள் 4 தொகுதிகளாகச் சற்றொப்ப 1600 பக்க அளவில் விரிந்துள்ளது.