பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வறுமை நிறைந்த சொற்களைப் பேசுபவர்கள் “வறுமொழியாளர்”. இதனையே திருக்குறள் பயனற்ற சொல் என்று கூறுகிறது. பயனற்ற சொற்களைக் கூறுபவர்களைப் ‘பதடி’ என்று வள்ளுவம் திட்டுகிறது.

சொற் குற்றத்தில் தீயது புறங்கூறல், அதாவது ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்தில் கூறுதல், அதுமட்டுமா? கண் எதிரில் முகமன்; புகழ்ச்சி! புறத்தே பழிதூற்றல்! இந்தக் குற்றம் மலிந்து வருகிறது. “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்கிறவர்கள், அறத்திற்காக என்று கூறுவார்களாம். அங்ஙனம் கூறுவது பொய்! நம்பாதே!” என்று எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர்.

அடுத்துவரும் சொற்குற்றம் மிகக் கொடிது! அதாவது கோள் சொல்லுதல், அம்மம்ம! காலத்திற்குரிய கடமைகள் இல்லாத சோம்பேறிகளின் தொழில், கோள் சொல்லுதல்; பகை வளர்த்தல். இன்று கோள் சொல்லிப் பிழைத்துத் திரிபவர்கள் எண்ணிக்கையும் மலிந்துவிட்டது.

அடுத்தது, சொற்குற்றம். தான் நினைப்பவையெல்லாம் நடந்தவை போலப் பேசுதல். இவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் பரப்பும் தீமை இருக்கிறதே அது, ஒருவரைத் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்குக் கொண்டு போய் விட்டுவிடும். “ஊரார் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்பது திருவாசகம், தத்தம் மனத்தன பேசுவோர் மிகவும் மோசமானவர்கள்.

சமுதாய உறவுகள் வளரவும், பாதுகாக்கப் பெறவுமே நெறிமுறைகள். சாலை வழிச்சென்றால் ஊரையடையலாம் என்பதைப் போல, உறவுகளுக்குரிய நெறிமுறைகளை அறிந்து உணர்ந்து ஒழுகினால் உறவுகள் வளரும்; பயன்தரும்; உறுதி யானதாக அமையும்.