பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மக்களாகப் பிறந்தோர், இயற்கை வழங்கிய அறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும். வாழ்க்கையின் இலட்சியமே மக்களை அறிவு நலமுடையவராக்குதலும், பண்பு நலமுடையோ ராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில், மக்களுடைய வாழ்க்கையின் நடைமுறை இல்லை.

வாழ்க்கைக்குப் பொறிகளும் புலன்களும் துய்ப்பனவும் கிடைத்தது எதற்கு? உண்டு, கூடிக் களித்து மகிழ மட்டுமா? இல்லை; உய்யும் நெறியில் செல்லத்தான்! ஆற்றல் மிக்க அறிவு வாயில்கள், இன்று பயனற்றுக் காமக் களியாட்டங்களுக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய தீமைகளை வளர்ப்பதற்குமே பயன்படுகின்றன.

இன்று எங்கும் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு என்ற பாங்கு வளரவில்லை. வாழ்க்கையின் தனி உறுப்புகளாகிய காதல், நட்பு ஆகிய துறைகளும் செழிப்பாக இல்லை. இப்பொழுது ஒரே இலட்சியம் “பிழைத்துவிடு! எப்படியாயினும் பிழைத்துவிடு” என்பதுதான்!

அரசு அமைப்புக்கள், முதிர்ச்சியும், உயர் இலட்சியமும் உடையவர்களால் இயக்கப் பெறாமையால் தேர்தல் போராகவே அமைந்துவிடுகிறது; ஒழுக்கச் சிதைவுகளும் வளர்ந்து வருகின்றன. ஆனால், இயல்பில் ஒழுக்கத் தவறில்லாத - ஆனால் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஒழுக்கத் தவறுகள் தண்டனைக்கு உள்ளாகின்றன.

ஏன் இந்த அவலம்? அதுவும் புகழ்பூத்த வரலாறு படைத்த தமிழ்நாட்டுக்கு! பாண்டிமாதேவியின் கற்புநலம் இந்த நாட்டின் தனிச்சிறப்பல்லவா? நாள்தோறும் வரும் செய்திகள் இன்று ‘கற்பு’ என்பது கேலிக்குரிய பொருளாகி விட்டது, என்றே பறைசாற்றுகின்றன.