பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

113



ஒரு காலத்தில் தேர்க்காலில் மைந்தனை இட்டு நீதி வழங்கியது அரசு. ஆனால் இன்று யாரையும் விசாரிக்கக் கூட இயலாமல் ஊர்க்காவல் நிலையத்தில் முற்றுகை! அரசியல் தலையீடுகள்; தப்பித் தவறி ஊர்க்காவல் நிலையத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் அங்கு விசாரணை இல்லை! சித்திரவதை! மனச்சாட்சியுடையவர்கள் ‘காயம்பூ’வும் ‘இராச’னும் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதை மறக்க இயலுமா? இந்த நாட்டில் நீதி நூல்களுக்குப் பஞ்சமா? இதிகாச புராணங்களுக்குத்தான் பஞ்சமா? மேடைகளுக்குத்தான் பஞ்சமா? அல்லது உப்தேசங்களுக்குத்தான் பஞ்சமா?

உலகிலேயே இந்தியாவில்தான் புராணங்கள் அதிகம்; உபதேசியார்கள் அதிகம்! ஆனால் நிலைமை என்ன? மதிப் புணர்ச்சியுடன் போற்றப்பட வேண்டிய பல்கலைக்கழகங்கள் கூடப் போராட்டக் களங்களாகத்தான் மாறி உள்ளன. போராட்டத்திற்குரிய நியாயங்கள் உண்டா? இல்லையா? என்பதல்ல கேள்வி.

உரிமைகளை அடைய அணுகும் முறைகளைப் பற்றித்தான் நமது கவலை! போராடுபவர்கள் மீது மட்டும் குறையில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் போராடினால்தான் பணிகிறார்களே தவிர, நியாயங்களைக் காலத்தில் ஆராய்ந்தறிய முன்வருவதில்லை.

இம் மனப்போக்கு, அநியாயங்களைத் தூபமிட்டு வளர்க்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் மனம் வைத்தால் எளிதில் தீர்க்கலாம்; தீர்த்துக் கொள்ளமுடியும். ஆயினும் மனம் வரவில்லை. ஏன்? மக்கள் உணர்ச்சியைவிட, மாக்கள் உணர்ச்சியே மேலிட்டிருக்கிறது. சராசரி மனிதனிடத்திலிருந்து மிகப் பெரிய இடம் வரையில் ஒரே நிலைதான்!

தீண்டாமை குற்றம். தீண்டாதார் என்று ஒதுக்குதல் கூடாது. சாதி வேற்றுமை தீது. சாதி வேற்றுமைகளை அறவே