பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றாமல் காக்க வேண்டிய கொற்றம். ஆனால், அரண்மனையிலேயே திருடர்கள்! திருடு! இதற்கு வாழ வேண்டியவர்களை - வாழ வந்தவர்களைக் கொலைப் பலி கொள்வது, என்ன நீதி:

கள்வர்கள் - கொலையாளிகள் நாடாள்பவர்களாக விபத்துக்களால் இடம்பிடித்துக்கொண்டு, மற்றவர்களைக் கள்வர் என்று பழி சுமத்துவது நியாயமா? நீதியா? கொலைகாரர்கள், நல்லவர்களைக் கொலை செய்வதுதான் கொற்றமா? இத்தகைய முறைகேடான கொற்றம் எங்கு அமையும்? எப்படி அமையும்?

நாட்டில் சான்றோர்கள் யார்? பெருமைக்குரிய பெரியவர்கள் யார்? இது இன்று புரியாத புதிர்! ஒருவர் உணவைச் சுருக்குகிறார்! வாய் பேசா மெளனியாக இருக்கிறார்! காதலின்பத்தை நாடாமலே புலனடக்கத்துடன் வாழ்கிறார்! இவையெல்லாம் சிறப்புத்தான்! ஆயினும் இவ்வியல்புகள் அருமையானவையா?

எத்தனையோ பேர் இந்த நாட்டில் ஒருவேளை உணவு, உண்ணுகிறார்கள், ஊமைகளாகவே பிறந்து வாழ்வோர் பலர்! பெண் யானைகள் கூடப் பிரிக்கப்பெற்று நாட்டில் வளர்க்கும்போது பிரமசரியம்தான் காக்கின்றன. அதனால், பெருமைக்குரியன ஆகிவிடுமா? கண்கண்ட தெய்வங்களாகி விடுமா? இவையெல்லாம் உடலால் செய்யும் தவம் ! பழக்கத்தால் வரும் இயல்புகள்!

நன்றாக உண்பதோ, களித்துப் பேசி மகிழ்ந்து வாழ்வதோ, காதலின்பத்தில் திளைத்து வாழ்வதோ பெருமைக்குரியன அல்ல - சான்றாண்மைக்குரியன அல்ல என்றால் நமது சமயங்களும் இலக்கியங்களும் புராணங்களும் கூறும் வாழ்க்கை முறைகள் என்ன, பொய்யா?

யாரையாவது புகழவேண்டுமாயின் வாயில் வந்தபடி யெல்லாம் புகழ்ந்து விடக்கூடாது. எதற்கும் நெறிமுறை