பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒரு நாள் அன்பு காட்ட மறந்தால் மறுநாள் அன்பு தலைப்படாது. பகை தோன்றிய உடனேயே அன்பினால் பகையை மாற்றிக் கொள்ளத் தவறினால் மறுநாள் அந்தப் பகை வன்பகையாக உருமாற்றம் பெற்றுப் படிப்படியாக வஞ்சினமாகி, கொலையளவு இழுத்துச் சென்று விடும்.

பகை கண்ட போதே பண்பாட்டு மருத்துவத்தைச் செய்துவிடல் வேண்டும். அப்பொழுதுதான் தீமைகள் மனத்தில் கூடாரமடித்துத் தங்கா. ஆதலால் நாழிகை தேர்றும் நாள்தோறும் மனத்துய்மை பேணும் அறம் செய்தல் வேண்டும். மேலும் நாளை செய்யலாம் என்றால் ‘நாளை’ என்னும் நாள் யார் கையில் இருக்கிறது? இஃது இயற்கையில் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அதனால் இறப்பு உணர்ச்சி மேலிட்டு அழுது மடிவதா? கூடாது.

வாழ்வதற்கே பிறந்த நல்லுயிர்கள் மரணத்தில் அழிந்து போகக் கூடாது. மரணத்தைக் காட்டிப் பயமுறுத்துவதற்காக நிலையாமையை எடுத்துக் கூறுவதில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சிச் சாகிறவர்கள் கோழைகள்; வாழத் தெரியாதவர்கள்.

பின் ஏன் மரணத்தைப் பற்றிய எண்ணம்? கல்வி, ஞானம், தொண்டு, அறம் ஆகியவற்றிற்கு, ஒவ்வொரு விநாடியும் கடைசி விநாடியே என்று கருதிச் செய்து வாழ்தல் நல்ல மரபு.

கல்வியை இன்றே கற்க வேண்டும். நல்ல நூல்களை நாடிக் கற்க வேண்டும். பெறுதற்கரிய ஞானத்தை இன்றே, இப்பொழுதே பெறவேண்டும். தொண்டு இப்பொழுதே செய்க, சிந்தித்தால் வாய்ப்பு இழக்கவும் நேரிடலாம். இந்த உயர் நோக்கத்தோடு சொல்லப் பெற்ற நிலையாமைக் கருத்து, எதிர்காலத்துச் சிந்தனையே இல்லாமல் செய்துவிட்டது ஒரு பெரிய குறை.