3
உணர்தல், விண்ணும் மண்ணும், வீட்டுலகம் முதலியன பற்றி அடிகளார் கூறிச்செல்லும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு.
அடிகளார் தெளிவுற அறிந்திடுதல், தெளிவுற மொழிந்திடுதல் என்ற இரு நிலையிலும் சிறப்பாக விளங்கியவர் என்பதனை இத்தொகுதிகள் பறைசாற்றுகின்றன. இலக்கியக் கட்டுரைகளாயினும் சரி, சமயக் கட்டுரைகளாயினும் சரி அடிகள் மனித குல மேம்பாடு ஒன்றிற்கே உயர்வளிப்பவர் என்பது விளங்கும்.
இந்நூல் வரிசையால் அடிகளாரிடம் தமிழ் முனிவர் திரு.வி.க.வின் சமுதாயப் பார்வையும், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் சமுதாய அரசியற் பார்வையும் இலங்கியதை அறியலாம். தமிழ் தேசியம் வேர்கொள்ள அடிகளார் ஆற்றிய பணி தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப் பெற்றுவிட்டது.
அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை, திருக்குறட் பேரவை, திருவருட் பேரவை முதலிய அமைப்புக்களைத் தோற்றுவித்து, தமிழ் இனம், நாடு முன்னேறப் பல்லாற்றானும் பணிசெய்தவர்.
உலகின் பெரும் பகுதியினைப் பலமுறை வலம் வந்தவராதலால் இவர் தம் எழுத்தும் பேச்சும் சமூக உணர்வுடன் சிறந்து விளங்கின. பயணத்திற்குப் பயணம் இவரது அனுபவ அறிவு செழுமை பெற்றதை இந்நூல்வரிசை பரிணாம முறைப்படி உணர்த்துகிறது. சமுதாய உய்வுக்கு அடிகள் உரைத்த பொன்மொழிகளின் படிமுறை வளர்ச்சியை, வாழ்வியல் அறங்கள் பற்றிய அடிகளாரின் நோக்கும் போக்கும் மாற்றம் பெற்ற திறத்தினை இவ்வரிசை நூல்கள் உயிரோவியமாக்குகின்றன. தமிழகத் துறவிகள் வரலாற்றில் அடிகளாரைப் போல அனைத்துலகையும் வலம் வந்தவர் வேறு எவரும் இலர்.