பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

135


நல்லன நோக்கி நல்ல நினைந்து செயற்படுதல் இல்லாமல் போகும்.

ஆதலால், ஊழியல் என்ற இந்த ஒழுங்கமைவு - நியதி எதிர்ப்பதற்குரியதன்று; வரவேற்கத்தக்கது. ஏன்? இயற்கையில், இப்படி ஒரு நியதி இல்லாது போனாலும் நாமாகவாவது படைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஊழியல் விதி நடைமுறையில் இருக்கும் பொழுதே மனிதகுலம் நன்னெறியில் ஈடுபட்டு நல்லன செய்வதில் நாட்டம் காட்டுவது இல்லை. மக்கள் அன்றாடப் பிழைப்பாளர்களாக உள்ளொன்றும் புறமொன்றும் உடையவர்களாக வாழ்கின்றனர்.

நேற்றைய வாழ்வின் விளைவாக இன்றைய வாழ்க்கைக்கு வரும் ஊழின் பயனை எதிர்த்துப் போராடலாம் என்பது கொள்கை.

எப்படி? நெடுந் தொலைவானாலும் விரைந்து செல்லும் ஊர்திகள் வழி, நெடுந்தொலைவுப் பயணம் எளிமையாக்கப் பெற்றுள்ளது; இன்புறுதலுக்குரியதாகவும் ஆக்கப் பெற்றுள்ளது. நோய், துன்பம் தருவதுதான்! நோயின் கடுமையை மருந்துகள் மூலம் தணிப்பதுடனன்றி, தீர்வும் காணப் பெறுகிறது.

புயல், பெருவெள்ளம் போன்றவைகளைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை; தடுத்து நிறுத்தவும் இயலாது. ஆயினும் அவை உருவாகி வரும் நிலைமைகளை அறிந்து அவற்றின் அழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றுவரும் விஞ்ஞான உலகத்தை நாம் மறுக்க முடியாதல்லவா? மனித இயலும் ஒரு விஞ்ஞானம் தானே!

நேற்றைய வாழ்க்கையின் பயனாகிய ஊழ், இன்றைய வாழ்க்கையின் தொடக்கமாகும். ஊழ், சித்தம், புத்தி, மனம் வழியாகப் பரிணமித்து எண்ணங்களாக வந்து மனிதனின் செயலூக்கியாக இடம் பெறும்.