பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று பாடியுள்ளார். இந்தப் பாடல் அருமையிலும் அருமையுடையது; சிந்தனைக்குரியது; வாழ்வுக்குரியது.

ஊழின் விளைபுலம், பற்றேயாம். இது எனது ஊர்; நான் பிறந்த ஊர்; வாழும் ஊர் என்றெல்லாம் உலகப் பொதுமை நோக்கின்றிக் கருதும்பொழுது, பற்றுணர்வு கால் கொள்ளுகிறது. பற்றுக்கள் ஆசைகளைத் தோற்றுவிக்கும் இயல்பின. ஆசைகள் உயிர்க்கு இன்பம் செய்வனபோல் காட்டித் துன்பம் செய்வனவேயாம்.

ஆசைப்பட்ட ஒன்றை அடையாத வழி உயிர்படும் அல்லல் எழுதிக் காட்ட இயலாதது. உடலுணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போதைப் பொருள்களின் வழிப்பட்டோர் படும் அவதிகளைக் காண்கிறோமே! ஆதலால், எப்பற்றும் தீயதேயாம். ஓர் ஊரில் வாழ்பவர்கள் அந்த ஊரின் மீது பற்றுக்கொண்டு அந்த ஊரை வளர்த்துப் பாதுகாத்தல் கடமையன்றோ! இக் கடமையை எப்படிப் புறக்கணிக்க முடியும்.

இக் கடமையை, புறக்கணித்தால் ஊர்கள் வாழும் இயல்பினை இழந்து பாலைவனங்களாகி விடாதா? ஆம்! நூற்றுக்கு நூறு உண்மை! பற்று என்பது உறவுகளைத் தவிர்ப்பது கடமைகளைத் தவிர்ப்பது; எதுவுமே இல்லாமல் சூன்யமாக்குவது என்பதல்ல.

கடமைகளின் தொகுதியே வாழ்க்கை. அன்பு, ஆசைகளின் வெளிப்பாடே வாழ்க்கை. பற்று என்பது, “மற்றவர்க்குக் கூடாது; வேறு யாருக்கும் இல்லை; எனக்கே உரியது” என்ற அடிப்படையில் முகிழ்ப்பது. அதுமட்டுமல்ல பற்றுக் காட்டப் பெறும் பொருள் கூட அதற்கு முக்கியமல்ல. அதில் உள்ள துய்ப்பு உரிமங்களை முதன்மைப் படுத்துதல் பற்று.