பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

143



“சாதலும் புதுவதன்று”. இங்கு உயிர் நிலையானது; என்றும் இருப்பது. உயிர்க்குச் சாதலும் பிறத்தலும் இல்லை என்னும் தமிழர் கொள்கையை நினைவிற் கொள்ள வேண்டும். ஆனால், உயிர் எடுத்துக் கொள்ளும் உடம்புகள் முதுமையடைவதால் அந்த உடலைக் களைந்து புது உடல் எடுத்தலைத்தான் சாதல்-பிறத்தலென்று தமிழ் கூறும்.

ஆதலால், சாதல் பழக்கப்பட்டுப் போன ஒன்று; கவலைப்படுவதற்கில்லை. ஆதலால், இன்பமென்று மகிழ்வுக் கூத்தடித்தற்கில்லை. இன்னாதன என்று கருதிப் புலம்புவதற்கும் ஒன்றும் இல்லை.

ஆற்றுவெள்ளம் ஓடும் திசையில் படகு செல்லுதல் போல, உயிர்கள், ஊழின் நெறியில் செல்லும் தகையன என்பது கொள்கை. இக்கொள்கையை அப்படியே ஏற்பதற்கில்லை. ஏற்கவும் இயலாது. ஏன்?

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை மனித உலகத்திற்குத் தேவையான மூன்று உயர்க்குறிக்கோள்களை உணர்த்தும் நோக்கத்துடன் இயற்றியுள்ளார். அம் மூன்று நோக்கங்கள்,


“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்என் பதூ உம்.”

என்பனவாகும்.

இவ்வுயிர்க் குறிக்கோள்கள், வாழும் மனிதக் குலத்திற்கு இன்றியமையாதன. மனிதகுலம் வாழும் நாடு, நல்ல வண்ணம் அமையவேண்டும். அதாவது நல்ல அரசியல் வேண்டும். நல்ல வலிமை சான்ற அறநெறிச் சார்புடைய - முறை வழங்கக் கூடிய சிறந்த அரசு அமையாத நாட்டில் இனிய வாழ்க்கை அமையாது; அமைதி கிடைக்காது. ஆதலால், வாழ்க்கைக்கு மிகுதியும் உறுதுணையாக