பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

149



கோவலன் மாதவியிடத்தில் விடுதல் அறியா விருப்பினனாகத் தங்கினான். அந்த விருப்பத்தையும்கூட ஊழ் வெற்றி கொண்டுவிட்டது. இந்த இடத்தில் கோவலன் வீழ்ச்சியைத் தடுக்கக் கூடிய நல்லியல்புகள் கோவலனிடத்தில் இல்லாமற் போனதே குறை.

ஒருவர் வாழ்க்கை, தோல்வியைச் சந்திக்காமலிருக்க வேண்டுமானால், அவர், நாள்தோறும் சிந்தித்துத் தம்முடைய தீய பழக்கங்களைத் தவிர்த்துக் கொள்பவராகவும், நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

நிகழ்ச்சிப் போக்கின் வழியில் செல்லாமல், நினைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும். நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் அவரைப் பாதிக்கக் கூடாது. இவைகள் எப்படியிருப்பினும், இவைகளுக்கு அப்பாலும், நின்று சிந்தித்துச் செயல்படுவோராக அவர் வாழ்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இத்தகையோர் வாழ்க்கையில், ஊழ் தோற்கும். அவர்கள் வெல்வர்.

இத்தகைய ஆற்றலும் நல்லியல்பும் கோவலனுக்கு இல்லை. அவன் உணர்ச்சி வசப்பட்டவன். நிகழ்வுகளின் வழி உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அரிய காரியங்களைக்கூட செய்திருக்கிறான். ஆயினும், அந்த உணர்ச்சி அவனிடம் நிலையாக இருந்ததில்லை.

எடுத்துக்காட்டு, ஒன்று: கோவலன், கணவனைப் பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணுக்குப் பொருள் கொடுத்து, கணவனைச் சேர்ந்து அவள் வாழுமாறு, வழி நடத்தினான். கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் துயரம், அவனுக்குத் தெரியத்தான் செய்தது.

ஆனால் அதே கோவலனுக்கு, தன்னைப் பிரிந்து வருந்தும் கண்ணகியின் துயரம் தெரியாதது ஏன்? இது தான் அவன் நிலைத்த உணர்ச்சி இல்லாதவன் என்பதற்கு