பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

153



கோவலன் காலத்தில் வாழ்ந்த சமுதாய மனப் போக்குகள், கோவலன் வீழ்ச்சியை விரைவு படுத்துவனவாகவே அமைந்திருந்தன. அதாவது கோவலன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல், சமுதாயத்தினிடத்திலும் இல்லை. கோவலன் நெறி முறை பிறழ்விற்குச் சமுதாயத்தின் நடைமுறையே துணையாகவும் அமைந்தது.

கோவலன் வறுமையுற்றுத் துன்பப்படும் காலத்து, அன்றிருந்த சமுதாயம் அவனைத் தேற்றும் குறிப்புடையதல்ல. இழித்துப் பழித்துக் கூறுவதோடு மட்டுமின்றி, அயலான் போலக் கருதும் மனப்போக்கும் சமுதாயத்தினிடத்தில் இருந்தது. ஆக, இத்தகு தீய சமுதாய ஊழ் கோவலனைப் புகாரில் வாழ அனுமதிக்க வில்லை.

ஆதலால், கோவலன் இழந்த பொருளை ஈட்டும் ஆவல், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் விருப்பம் ஆகி, பல்லாண்டு பழக்கப்பட்ட உணர்வுகள் தூண்ட, மதுரைக்குச் செல்ல நினைக்கின்றான்.

மதுரை, அயல்நாட்டு நகரம். அவனை அறியாதவர் பலர் அங்குண்டு. அவனுடைய சென்ற கால வாழ்க்கையையும், நிகழ்காலத் தாழ்ச்சியையும் எடுத்துக் கூறித் தூற்றுபவர்கள் யாரும், அங்கு இருக்க மாட்டார்கள். நேற்று மதித்தவர்கள் இன்று செல்வமின்மையின் காரணமாக, அலட்சியப்படுத்தும் கொடிய துன்பம் அங்கு இருக்காது.

இருந்த செல்வத்தை, உடனிருந்து அனுபவித்தவர்கள், தொடர்ந்து வர மாட்டார்கள். அதனால் சிக்கனமாக வாழ முடியும். புகாரை விட்டு மதுரைக்குச் சென்றுவிட்டால் மாதவியைக் கூட அவனால் முயன்று மறந்து விட முடியும். இத்தகைய எண்ண அலைகளால், கோவலன் உந்தப் பட்டிருக்கக் கூடும்.

இந்தச் சிந்தனைகள் அனைத்தையும் கூர்ந்து நோக்கினால், கோவலனுடைய பழக்க வழக்கங்கள் வழித்