பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாற்றலாம். மாற்றமுடியும் என்பதற்குப் பாண்டியன் நெடுஞ்செழியனே சான்றாவான்.

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

(காட்சிக் காதை - 98-99)

என்பது எண்ணத்தக்கது.


கண்ணகியின் கற்பு


இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் செய்த நோக்கங்களுள் ஒன்று, “உரைசால் பத்தினிக்கு உயர்ந்ததோர் ஏத்தலும்” என்பது. பெண்ணுக்குப் புகழ், கற்பு. புகழ் மிக்க, கற்புடைய பெண்ணை, உலக மக்கள் பாராட்டுவர். அமரர்கள் போற்றுவர்.

கற்பு என்பது என்ன? இதற்குப் பலர் பலவாறு பொருள் கொண்டுள்ளனர். கொன்றை வேந்தன் ஆசிரியர், “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” என்று கூறியுள்ளார். அதாவது, கணவன் சொல்லுக்கு எதிராகச் சொல்லா திருத்தல், என்று கூறுவர். இக்கருத்து சிறந்த மனையற வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது.

கணவன் சொல்வது தவறாக இருக்குமானால், பெண் அந்தத் தவற்றுக்கு உடந்தையாக இருந்து கணவனுக்குக் கேடு சூழ்வதை எப்படிக் கற்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

கணவனுக்கும், தனக்கும், இருவரும் சார்ந்த குடும்பத்திற்கும், குடும்பத்திற்குக் களமாக இருக்கும் சமுதாயத்திற்கும், நலம் பயக்கின்றவாறு வாழ்வதும், கணவனின் வாழ்க்கையை அந்த வாழ்க்கையில் நிலை நிறுத்துதலும் தான், உண்மையில் சிறந்த பெண்ணின் கடமை.