பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

171


உணர்த்துகிறாள். இங்ஙனம் உணர்த்த வேண்டிய அவசியம் என்ன ?

மீண்டும் தொடர்ச்சியாகப் பெறுதற்கு, பொருள் யாதொன்றுமில்லை என்ற குறிப்பை உணர்த்துவதன் மூலம் அவனைப் பொருள் செயல் வழியில் நெறிப்படுத்தலாமா என்று எண்ணியே “சிலம்புள கொணம்” என்று கூறுகிறாள்.

கோவலனை, மதுரைக்குச் சென்று வாணிகம் செய்து பொருளிட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆற்றுப் படுத்தியது “சிலம்புள கொணம்” என்ற கண்ணகியின் சொல்லே என்று கூறலாம். ஆதலால் கண்ணகியின் வாழ்வும் இலட்சியமும் கோவலனைச் சார்ந்து இயங்கியது எனலாம்.

சொற்காத்த கண்ணகி

கற்புடைப் பெண்ணின் அடுத்த கடைமை “தகைசான்ற சொற்காத்தல்” என்பதாகும். அதாவது கணவனின் புகழை, பெருமையைப் பாதுகாத்தல், பிறரால் மகிழ்ந்து சொல்லப்படுவது புகழ். ஆதலால், புகழைச் சொல்” என்று வள்ளுவம் கூறுகிறது.

காதல் வாழ்க்கையில், மன வேற்றுமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஊடல் முற்றி வளர்ந்து புலவியாகலாம். ஆயினும் எந்தச் சூழ்நிலையிலும், கணவனின் புகழுக்கு, ஊறு ஏற்படாமல் காப்பவளே கற்புடைய பெண்.

அது போலவே கணவன் மொழிந்த வாக்கு, சூளுரை ஆகியவைகளை நிறைவேற்றி, அவன் மொழிந்த சொல்லை நிறுத்தத் தக்கவாறு, கற்புடைய மனைவி தோழமையாக விளங்கித் துணை செய்ய வேண்டும். தன்னயப்பால் கணவனின் கொடைக்கு இடையூறாக விளங்கக்கூடாது. இன்ப நயப்புணர்வால் கணவனைக் கடமைகள் மீது செல்லவிடாமல் தடுத்தல் கூடாது.