பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

175



மானிட வாழ்க்கையில் காதல்-நட்பு ஆகிய இரு உறுப்புக்கள் மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் தோழமை உறுப்புக்களாகும். இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோர், தொடர்புடையோர் நலனைப் பாதுகாப்பர்.

கண்ணகி கோவலனுக்குக் காதற் கடமை பூண்டவள். கோவலனின் வாழ்க்கை தன்னுடைய தவறுக்கு ஏற்றதாக இல்லையானாலும் அவன் புகழைப் பாதுகாக்கும் உணர்வோடு பூம்புகாரில் பொறுமையாக இருந்தாள். பூம்புகாரில் பாதுகாத்த கணவரின் பெரும் புகழைப் பாதுகாப்பதற்கே மதுரைக்கு வந்ததையும் கண்ணகி நினைவு கூர்கிறாள்.

ஆதலால், தனது இளமையை இழந்தும் வாழ்க்கை நலன்களை இழந்தும் காப்பாற்றிய கணவனின் புகழ் மதுரையில் மாசுறுவதை அவளால் தாங்கமுடியவில்லை. கோவலனின் இழப்பில் கண்ணகிக்கு இருந்த ஆற்றாமையை விட - கோவலன் மீது சுமத்தப் பெற்ற பழியில்தான் அவளுக்கு இருந்த ஆற்றாமை-ஆத்திரம் அதிகம்.

கோவலன் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்டவுடனேயே, கண்ணகி துன்பத்தின் எல்லைக்குச் சென்று விடுகிறாள். கோவலன் கள்வன், அதனால் அவன் கொல்லப்பட்டான் என்ற செய்தி அவளை அனலாக்கி விட்டது. அவளுக்குத் தன் கணவன் கள்வன் அல்லன் என்னும் தெளிவிருக்கிறது.

அது மட்டுமா? தனது காற்சிலம்பை விலை கொடுக்காமல் அடைவதற்காக, கோவலன் மீது பழி சுமத்தி விட்டார்கள் என்று துணிகிறாள். இத்தகு தெளிவு கண்ணகிக்கு எப்படித் தோன்றியது: ஆராய்ந்து பிறந்த தெளிவல்ல, கடப்பாட்டின் வழிப்பிறந்த தெளிவு.

காதலில், நட்பில், பழகியவர்களை ஐயப்படுதல் ஆராய்தல் மூலம் நட்பு கெடும்; காதல் கெடும். ஆயினும்