பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அமைச்சர்களும் மற்றவர்களும் நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று வாளா இருந்து வயிறு வளர்த்திருப்பர் போலும். ஆதலால் ஒரு நாட்டுச் சமுதாய அமைப்பு கெட்டுப் போனால் ஒழிய அரசு தவறு செய்ய முடியாது.

தவறு செய்வதற்கு நேரிடையாக நெடுஞ்செழியன் காரணமாக இருந்தாலும் அவனை இவ்வகைக் குற்ற நெறியில் செலுத்திய அந்த நகரத்து மக்களும் பொறுப்பாவர். ஆதலால்தான் கண்ணகி குற்றமுடைய ஓர் அரசு தோன்றி வளரக் காரணமாக இருந்த மதுரையை அழிப்பேன் என்று உறுதி பூணுகிறாள்.

ஆயினும், கண்மூடித்தனமாகவும் அவளுடைய சினம் செல்லவில்லை. வாழ்ந்தாலும் செயலற்றவர்களாக பொதுமைக்குப் பொறுப்பேற்காது ஒதுங்கி வாழ்பவர்களாகச் சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்களையெல்லாம் தப்பித்துக் கொள்ள விடுகிறாள்; தீத்திறத்தார் மட்டுமே அழியுமாறு அழிக்கின்றாள்.

தீத்திறத்தாரை அழிப்பது பாவமா? கழனியில் களை பிடுங்குவது தவறா? ஆதலால் கண்ணகி மதுரைக்கு எரியூட்டியது அரசியல் நீதி! சமுதாய நீதி! அறத்தின் ஆட்சி! கொற்றம் செய்த கொடுமையிலிருந்து குடி மக்கள், நல்லாட்சியை அமைத்த வரலாறு!

உரைசால் பத்தினி

இளங்கோவடிகள் தமது காப்பியத்தை மூன்று குறிக்கோள்களோடு தொடங்குகின்றார். அவற்றுள் ஒன்று “உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல்” என்பதாகும். ஒருவரைப் பண்பறிந்து போற்றும் பண்பு எல்லாருக்கும் வந்து விடுவதில்லை.