சிலம்பு நெறி
183
அடுத்து, மதுரை நகரத்தெய்வம் “பெருந்தகைப் பெண்ணோ!” என்று அழைக்கிறது. ‘பெருந்தகை’ என்ற சொல் வள்ளுவத்தில் மாட்சிமை பெற்றது.
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்”
என்பது திருக்குறள்.
“பெருந்தகை” என்பது, தான் துன்பத்தை ஏற்றுக் கொண்டு மற்றவர்க்கு வாழ்வளித்தல் என்ற பண்பாடு ஆகும். கண்ணகி பூம்புகாரிலும் சரி, மதுரையிலும் சரி, துன்பத்தைத் தழுவியவள்; கோவலனை வாழ்வித்தவள். சிறந்த பெண் என்பதைப் ‘பெண்ணின் பெருந்தக்க’ என்று திருக்குறள் பாராட்டும். மதுரை நகரத் தெய்வமும் கண்ணகியைப் ‘பெருந்தகைப் பெண்’ என்று பாராட்டுகிறது.
அடுத்து, வஞ்சிக்காண்டத்தில் - குன்றக்குரவையில் கண்ணகி தெய்வமெனப் போற்றப் பெறுகிறாள். மலை வாழ் குறவர், தங்கள் குலத்தில் கண்ணகி போன்றதொரு தெய்வம் இல்லையென்று போற்றுகின்றனர்.
“இவள் போலும் நங்குலத்தோர்
இருந்தெய்வம் இல்லை”
என்பது காண்க.
இளங்கோவடிகள், மண்ணக மாதர்க்கு அணியென விளங்கிய கண்ணகி, விண்ணக மாதர்க்கு விருந்தாக அமையும் அருட் காட்சியை நெஞ்சு குளிர எடுத்தோதுகின்றார்.
“தெய்வந்த தொழாஅள் கொழுநற் றொழுவளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்-தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து”
என்பது, இளங்கோவடிகள் வாக்கு.