பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

187



மாதவி, கோவலனுக்கு வாய்த்த நல் துணைவி. கோவலன் மாதவியைச் சாரும்பொழுது குற்றங்கள் உடையவனாக இருந்தான். தென்றல் பல மலர்களை நுகர்ந்து வருவதைப் போல் கோவலன் சுற்றித் திரிந்தான் என்று இளங்கோவடிகள் கூறுவார்.

மாதவியை அடைதற்குரிய மாலையைக் கோவலன் வாங்கிய இடமே நகர நம்பியர் திரிதரும் தெருவாகும். யாதொரு குறிக்கோளுமின்றிக் காரணமின்றி நகரைச் சுற்றித் திரிகின்றவர்கள் திரியும் தெரு அது. அத்தகு நகர நம்பியருள் கோவலனும் இருந்தான். அது மட்டுமா?

உணவுக்கு உழைக்காமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுத்துத் திரியும் இத்தகு நகர நம்பியர்கள் கூடிக் கூடிப் பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்குவர்; பேச்சினூடே, தாங்களாகவே நெடிய சிரிப்புச்சிரித்துக் கொள்வர்; பரத்தமை கொண்டொழுகுவர். இதனை இளங்கோவடிகள்,

“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ”

(கொலைக்களக்காதை 63-66)

என்று கோவலன் வாயிலாகவே கூற வைக்கிறார்.

ஓர் இளைஞன், நல்ல தலைமகனாக வளர்ந்து முன்னேற வேண்டுமாயின், உழைத்து உண்பவனாக இருக்க வேண்டும். உழைப்பில் ஆர்வம் காட்டி மகிழும் மனப்போக்கு வேண்டும். பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது. குறை, கோள், பொய் முதலிய தீச் சொற்களைப் போலவே பயனற்ற சொற்களும் தீமையானவை.