பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இதனை இளங்கோவடிகள், “கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” என்று மாடலன் வாயிலாக வாழ்த்துகின்றார்.

கோவலன் சான்றோனாக விளங்கி வாழ்ந்த காலமும் மாதவியிடத்தில் வாழ்ந்த காலமேயாம். இளங்கோவடிகள் “கடன் அறிமாந்தர்” என்று ஒரு புதியமானிட சாதியை அறிமுகப்படுத்துகின்றார். கடனறி மாந்தர் யார்? பிறர்க்குப் பணி செய்து கிடப்பதே தன் கடன் என்று உணர்ந்தவர்கள் கடனறிமாந்தராவர்.

இன்றைக்கு, கடமையென்பதற்கு இந்தப் பொருள் கொள்ளப்படுவதில்லை. அது மட்டுமல்ல, பிறருடைய தீவினையைத் தீர்ப்பதனால்தான் ஒருவர்க்குப் புண்ணியம் உருவாகிறது, கிடைக்கிறது என்றும் இளங்கோவடிகள் கூறுகின்றார்.

இன்றுள்ள மனப்போக்கு, “தீவினையுடையோரின் தீவினையை மாற்றுதல் கூடாது; அவர் துன்புறுதல் வேண்டும்; அதுவே இயற்கையின் நியதி” என்பதாகும். இது, அறநெறியன்று.

கோவலன், கண்ணகியை பிரிந்து கண்ணகிக்குத் துயர் கொடுத்தாலும் மற்றவர்களின் துன்பத்தை உணர்ந்திருந்தான். கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் பாபத்தைப் பெரும் பொருள் கொடுத்துக் கழிக்கிறான். அது மட்டுமா? பார்ப்பனனைப் பிரிந்து வருந்திய பார்ப்பனிக்கு, அவனையும் அழைத்து வந்து சேர்த்து வைத்துப் பெரும் பொருள் வழங்கி வாழச் செய்கிறான்.

இதனை இளங்கோவடிகள் “நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ” என்று மாடலன் வழியாக வாழ்த்துகின்றார்.

சமூகத்தில் எந்தக் காலத்திலும் தூர்த்தர்கள் வாழ்வர் போலும். இவர்களுக்குக் கால எல்லை இல்லையோ? திருத்தமுற்ற முழுச்சமுதாயம் காண்பது அரிதோ?