பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிரியாமல் பேணிப் பாதுகாத்து வந்தாள். இது அவளுடைய வாழ்க்கைத்திறம்.

பெரும்பொருள் குறைந்ததற்குக் காரணம், மாதவிபால் சென்று தங்கிய கோவலன் பொருள் ஈட்டத்தைக் கவனிக்கவில்லை; வணிகத்தைக் கவனிக்கவில்லை. பொருட் செல்வம் நாள்தோறும் பேணி வளர்த்துத் தொகுத்தால்தான் உளதாகும். மாதவிபால் வாழ்ந்த கோவலன் இந்தப் பொருள் செயலை மறந்தான்.

உரியவர் கண்காணிக்காத செல்வம் அழிவது இயற்கை அதுவும் வணிகக் குடும்பத்தின் செல்வம் எளிதில் குறையும். கோவலன் குடும்பச் செல்வம் நிலப்பிரபுத்துவ முறையில் அமைந்த செல்வமல்ல; வணிகச் செல்வம். அஃது ஈட்ட ஈட்டத்தான் வருமே தவிரத் தம்மியல்பாக வருவதல்ல.

எப்படிப் பொருள் குறைந்தது? பொருள் ஈட்டும் பணியில் கோவலன் ஈடுபடவில்லை. ஆயினும் வளமான வாழ்க்கை வாழ்கிறாள்; மற்றவர்களுக்கும் வழங்குகிறான்.

கோவலன் மனநிறைவு கருதி மாதவியும் இதில் தலையிடவில்லை. இந்த வகையில்தான் கோவலனின் பொருள் அழிந்திருக்க வேண்டும் என்று உய்த்துணர வேண்டியிருக்கிறது.

இங்ஙனம் விழிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்ந்த மாதவிக்கும் அடிச்சறுக்கல் ஏற்பட்டு விடுகிறது.

பூம்புகாரில் இந்திரப் பெருவிழா. அனைவரும் கூடிக் கடலாடிக் களித்து மகிழும் விழா. கோவலனும் மாதவியும் கடலாடச் சென்று ஆடிக் களித்து மகிழ்ந்து அமர்ந்திருக்கும் பொழுது, மாதவி, கோவலன் கையில் யாழினைக் கொடுத்து மீட்டிப்பாடச் சொல்கிறாள். கோவலனும் மாதவி மனம் மகிழ யாழினை இசைத்துப் பாடுகிறான். கோவலன் பாடிய பாடலில் யாதும் உள் நோக்கம் இல்லை. ஆயினும்; கோவலன் பாடிய,