பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

203



அதுபோலவே நில அளவையையும் அறிமுகப் படுத்தியது. மக்களாட்சி முறையைக் குடவோலை மூலம் நடைமுறைப்படுத்திய பெருமை சோழப் பேரரசுக்கு உண்டு.

தமிழரசுகளில் ஊராண்மை சிறந்து விளங்கியது. இன்று மக்களாட்சி நடைபெறும் காலத்தில் கூடப் பழைய ஊராண்மை இல்லை. கட்சிகள் பலவாகி, கட்சிகளில் குழுக்கள் பலவாகி வலிமை வாய்ந்த ஊராண்மையைச் சிதைத்துவிட்டனர். ஊராட்சி மன்றங்கள் சட்டப்படி இருந்தாலும் கூட நாடு பாதி, காடு பாதி என்பதைப் போல் ஊராட்சி மன்றங்களை இயங்காமல் முடக்கி வைப்பதுதான் அரசின் பணியாக இருந்து வருகிறது. ஊராண்மை இருந்தால்தான் கிராமங்கள் வளரும்; அரசின் பணி எளிதாகும்.

பாண்டியப் பேரரசர்கள் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்ததில் புகழ் பெற்றனர். சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் பாண்டிய நாட்டையே களமாகக் கொண்டு தோன்றியவை.

பாண்டிய அரசர்களில் பலர் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், பாண்டியன் அறிவுடை நம்பி ஆகியோர் கவிஞர்களாக விளங்கிய பாண்டியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சேர அரசு செந்தமிழ் அரசு, வீர வரலாறு படைத்த அரசு. நல்ல சைவப் பற்றுடைய அரசு. அதே போழ்து சமய சமரசம் நிலவிய அரசு, வஞ்சி நகரத்தில் பல்வகைச் சமய நெறிகளும் இயங்கின. அதனாலேயே இளங்கோவடிகளிடத்தில் சமண சமயத்தின் தாக்கம் இருந்தது.

சிலப்பதிகாரம் தமிழினத்தின் தேசியக் காப்பியம்; தமிழகம் தழீஇய காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம், சிலம்பை