பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயற்றியவர் இளங்கோவடிகள், சேர அரச மரபினர் தமிழக வரலாற்றில் தொன்மையான மரபினர். பாரதப் போர்க் காலத்திலேயே சேரர் குலம் புகழுடன் விளங்கியது.

இன்றைய அரசியலில் நடுநிலைக் கொள்கை பேசப் பெறுகிறது. பாரதப் போர் நடந்தபோது கெளரவர்கள் - பாண்டவர்கள் ஆகிய இரண்டு அணியினருக்கும் உணவு வழங்கிய பெருமை சேர அரசருக்கு உண்டு. இந்த நடுநிலைக் கொள்கையை, “பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை” என்று சிலம்பும்

“வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!”

(புறம்-2)

என்று புறநானூறும் பாராட்டுகின்றன. சேர அரசர்களைப் பற்றிய இலக்கியங்கள் சங்க காலத்திலேயே தோன்றிவிட்டன. இவற்றுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம் வளர்ந்து வந்த சேரர் மரபில் நெடுஞ்சேரலாதனின் அருமை மக்களாகச் செங்குட்டுவனும் இளங்கோவும் தோன்றினர். செங்குட்டுவன் அரசுப் பணி ஏற்க வாய்ப்பாக இளங்கோ துறவியாகிறார். இளங்கோ புவியரசாகாமல் கவியரசாகிச் சிலப்பதிகாரத்தை இயற்றி யருளினார்.

செங்குட்டுவன் செஞ்சடை வானவன் அருளில் தோன்றியவன் என்று சிலம்பு பேசுகிறது. முடியுடை மூவேந்தருள்களும் சேர அரசு விழுப்பம் உடையது; பாடும் புகழுடையது. நீதி வழுவாத் தன்மையுடையது. சேர மரபினர்