பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேரன் செங்குட்டுவனின் மைத்துனன். பெருநற்கிள்ளி காலத்தில் சோழநாடு பிரிந்து ஒன்பது பேர் ஆட்சிக்குட்பட்டது.

சோழ நாட்டை ஒரே நேரத்தில் சோழ மரபினைச் சேர்ந்த ஒன்பது பேர் ஆண்டனர். ஒன்பதின்மரும் இளவரசர்கள்; ஒத்த தன்மையினர். இதன் காரணமாகச் சோழர் குலத் தலைவன் பெருநற்கிள்ளியின் ஆணைக்கு ஒன்பது இளவரசர்களும் கட்டுப்பட மறுத்தனர். பகைமை கொண்டனர். இந்தச் சோழர் ஒன்பதின்மரையும் போரில் வென்று தமது மைத்துனனிடம் சோழப் பேரரசின் கொற்றத்தைத் தந்து ஒரு நிலைப்படச் செய்த பெருமை சேரன் செங்குட்டுவனுக்கு உண்டு.

சேரன் செங்குட்டுவன் ஒரு சமயம் மலைவளம் காணப் புறப்பட்டான். பேரியாற்றங் கரையில் தனது மனைவி இளங்கோ வேண்மாதேவி மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடன் பாடி வீடு அமைத்துத் தங்கியிருந்தான். அதுபோது வடபுலத்திலிருந்து தவமுனிவர்கள் சிலர் வந்து செங்குட்டுவனைச் சந்திக்கின்றனர்.

தவமுனிவர்கள் செங்குட்டுவனை வாழ்த்திவிட்டு வரலாற்றுத் திருப்பத்திற்குரிய செய்தியைத் தெரிவிக்கின்றனர். “மன்னர் மன்ன! தமிழ் நாட்டரசர்கள் வடபுலம் வெற்றி கொண்டபோதும், வட பனி மலையில்-இமயத்தில் சின்னங்கள் பொறித்தபோதும் எம்மைப் போல வலிமையுடைய அரசர் இல்லைபோலும்” என்று வடநாட்டு அரசர்கள் கூறிய செய்தியை உரைக்கின்றனர் செங்குட்டுவனிடம்.

இத்தருணத்தில் சாத்தனாரும் அந்த அவைக்கு வருகிறார். சாத்தனார் கண்ணகி வரலாற்றில் நிகழ்ந்தன அனைத்தையும் முறைப்படுத்திக் கூறுகிறார். பாண்டிய அரசன் இறந்த செய்தி கேட்டபொழுதும் செங்குட்டுவன் மகிழ்ந்தானல்லன்; வருத்தமுறுகின்றான். இந்தச் சூழ்-