பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

211


கூடவும் வணிகர்கள் கூடுதல் செல்வ ஆதாரங்களைப் பெற்று விளங்கினர் என்பது வரலாற்றுண்மை.

இன்றும்கூட மக்கட் சமுதாய வாழ்க்கையின் உயிர் நாடியாக விளங்கும் உழவர்களைவிட, வணிகர்களிடம் செல்வம் கூடுதலாகத்தான் குவிந்திருக்கிறது. வணிகர்களே அரசை இயக்குகின்றனர்; நடத்துகின்றனர்.

இதுபோல் பண்டைக் காலத்திலும் சோழப் பேரரசிற்குச் செல்வம் வேண்டும்போது கொடுத்து உதவும் தகுதியில் வாழ்ந்த குடும்பம் கோவலனின் குடும்பம். ‘அரசுவிழை திரு’ என்பது இளங்கோவடிகள் வாக்கு. சமுதாய வளர்ச்சியில் வணிகர் சமுதாயத்தின் வளர்ச்சியை நினைவூட்டியவர் இளங்கோவடிகள்! இலக்கியத்தில் அரசு, வணிகர் என்ற சமுதாயப் படிமுறை வரலாற்றை உணர்த்தியது சிறப்பு.

வாழ்க்கைக்குச் செல்வம் தேவை. ஆயினும் செல்வம் மிகினும் குறையினும் துன்பம் செய்யும். சோழப் பேரரசு - பூம்புகார் நகரம் செல்வத்தில் செழித்தது. அதனால் ஒழுக்கம் பாழ்பட்டது. முற்றவெளியில் மகளிரை விலைகூறும் அளவுக்குச் சோழ நாட்டின் சூழல் கெட்டுவிட்டது. மாதவி ஆயிரம் கழஞ்சு பொன் கூறி விற்கப்படுகிறாள். கோவலன் வீழ்ச்சிக்குக் காரணம் பூம்புகாரில் நிலவிய சமுதாய அமைப்பே என்று சிலம்பு உணர்த்துவது புதிய மரபு: புதிய நெறி.

ஊழில் நம்பிக்கை உடைய இளங்கோவடிகள் கோவலனின் வீழ்ச்சிக்கு ஊழைக் காரணமாகக் காட்டாது கோவலன் வாழ்ந்த சூழ்நிலையால் ஒழுக்கம் பாதித்துக் கெட்டுப் போனான் என்று கூறுவதன்மூலம் இலக்கிய உலகில் சூழலைப் பற்றிய சிந்தனையை அறிமுகப்படுத்தியது புதுமை. கோவலனின் வீழ்ச்சிக்கு காரணமாயமைந்தது சூழல். இதனை,