பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

215



ஒரு தவற்றுக்கு வழக்காட இத்தனை பேருடைய உடன்பாடும் தேவை. இது மரபு. எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று பேசாமல் இங்ஙனம் முறைப்படி சிந்தித்துப் பேச வைத்தது ஒரு புதுமை.

இவை மட்டுமா? கண்ணகி அடுத்துத் தன் கணவன் கள்வனா? இல்லையா? என்று ஆய்வு செய்கிறாள். ‘காய் கதிர்ச் செல்வனை நோக்கிக் கேட்கிறாள்; காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?’ என்று! கதிரவனின் ஒளிக்கற்றை நுழையாத இடமில்லை.

ஆதலால், காய்கதிர்ச் செல்வனே! உனது ஒளிக் கற்றைகள் சென்ற இடங்களில் என் கணவன் கோவலன் கள்வனாக இருந்ததைக் கண்டிருக்கிறாயோ சொல்! சொல்! என்று கேட்கிறாள். கொலைக் களத்தில் வேறு சாட்சி இல்லை! ஆதலால், காய்கதிர்ச் செல்வனே சாட்சியாக வேண்டிய கட்டாயம்.

பாண்டியனின் அவை கண்ணகி வழக்குரைக்கிறாள்! இந்த நூற்றாண்டில் வழக்கு எப்படி உரைக்க வேண்டுமோ அந்த மரபுப்படி வழக்குரைக்கின்றாள்! கண்ணகி முதலில் தான் பிறந்து வளர்ந்த சொந்தச் சோழநாட்டரசின் நீதிச் சார்பினை, தனது குடும்பத்தின் மாண்புகளைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

அடுத்து நேரிடையாகப் பேசுகிறாள். “பாண்டியனே! என் காற் சிலம்பு மாணிக்கப் பரல்களையுடையது” என்கிறாள்! பாண்டியன் தம்முடைய சிலம்பு, முத்தினை உடையது என்று பதில் சொல்கிறான். பாண்டியன் அந்த சிலம்பைக் கொண்டுவரச் செய்கிறான். கண்ணகி சிலம்பை வாங்கி வீசி உடைக்கிறாள். மாணிக்கப் பரல்கள் சிதறுகின்றன. நேரிடை நிரூபணம்! இதுவே சட்டங்கள் வழி வழக்காடு முறை! இந்த முறை சிலம்பில் விவரிக்கப்படுவது புதுமை.