பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்ள வேண்டும் அல்லது தாங்கும் சக்தியற்ற கோழைகளாக இருப்பின் எல்லாவற்றையும் துறந்து எங்கேயாவது ஓடிவிட வேண்டும் என்ற கொள்கை தமிழ்வழக்கன்று! ஏன்? வாழும் நெறியும் அன்று துன்பம் இயற்கையாக இருக்கலாம். ஆனால், அவற்றை மாற்றுவதற்குரிய சக்தி நமக்கு உண்டு என்று நம்பாத மனித உலகம், வாழ்ந்தும் வாழாத உலகமே என்று கூறி, மனித முயற்சியை மேலும் முதன்மைப் படுத்துகின்றார்கள். “படைப்புக் கடவுள் மண்ணைப்படைத்தால் மனிதன் மாளிகைகள் படைக்க வேண்டும். கனிதரு சோலைகள் படைக்க வேண்டும். நான்முகன் படைத்த மண்ணில் உவரும் களரும் இருக்கலாம். ஆனால் மனிதன் படைத்த கனிதரு சோலைகளில் இனிய கனிகளே உண்டு நான்முகன் கடலைப் படைத்தால் மனிதன் கலம் படைப்பான். தீமையை எதிர்த்து, துன்பத்தை எதிர்த்து, வறுமையை எதிர்த்து, அறியாமையை எதிர்த்துப் போராடப் பிறந்தவன். ஆனால் ஐயோ! அவன் இன்று பக்கத்தில் உள்ள மனிதனோடு போராடிக் கொண்டிருக்கின்றான். அவன், தேவையில்லாத சாதிகளை - வேலிகளைக் கற்பித்துக் கொண்டு உடன்பிறந்த சகோதரர்களோடு போராடிக் கொண்டிருக்கின்றான்” என்று மனித சமுதாயம் தவறான திசையில் செல்லுவதைச் சுட்டிக் காட்டித் திருத்த முயற்சி செய்கின்றார்கள். உலகத்தின் போக்கினைக் கூறி, நிறைவில் வணிக உலக வாழ்க்கையை அறிவுறுத்தித் திருந்தி வாழ முயற்சி செய்யுமாறு கூறுகின்றார்கள்.

“வறுமையை எதிர்த்துக் கழனியில் போராட வருபவர் எத்தனை பேர்? ஊர் எல்லாம் உண்ணக் கொடுத்தவன்தான்