பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
 மெய்வருத்தக் கூலி தரும்”

என்றும் கூறி, ஊழையும் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் திருவள்ளுவர் தந்தார். ஆயினும் ஊழ் பற்றிய சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஊழை மையமாகக் கொண்டு - ‘ஊழ்வினை உருத்து வந்துட்டும்’ என்ற கோட்பாட்டையே மையமாகக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். ஆனால் சமய ஆசிரியராகிய திருஞானசம்பந்தர், உய்யுமாறு தேடிச் செய்யும் வினை செய்யாது அவ்வினைக்கு இவ்வினை என்று சொல்லித் திரிவாரை மறுக்கிறார்.

“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்”

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.

ஊழ் என்பது தான் என்ன? ஆன்மாவின் பழக்கங்கள், வழக்கங்களே! பிறப்புதோறும் ஆன்மாவிடத்தில் புலன்களில் முகிழ்ப்பதே ஊழ். எனவே, பழக்கங்களையும் வழக்கங்களையும் மனிதன் சிந்தித்து அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டானானால் ஊழை வெற்றி பெறமுடியும். ஊழின் ஓய்வு ஒழிவு இல்லாத தாக்குதலிலிருந்து தப்ப, துன்பங்கள் துயரங்கள் ஆகியவற்றால் கலங்காத துணிவுடன் கூடிய முயற்சி தேவை. ஒவ்வொரு நாளும் முந்தைய வினையைவிட எந்த வகையிலும் குறையாத கூடுதல் முயற்சி தேவை. அப்பொழுதுதான் ஊழை வெற்றி பெற இயலும். ஆதலால் இலக்குவன்,