பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

233


“உதிக்கும் உலையுள் உறுதி என ஊதை பொங்க
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? தோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலிஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி”

(கம்பன்-1735)

என்றான்.

“விதிக்கு விதியாகும் என் வில் தொழில்” என்று இலக்குவன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இலக்குவனால் முடியும். ஆனால், இராமனுடைய செந்தண்மை இலக்குவனைச் செயற்படத் தடுத்தமையினாலேயே இலக்குவனால் விதிக்கு விதி செய்ய இயலவில்லை. இன்று நம்முடைய நாட்டில் ஏராளமான மக்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் விதியின்பால் உள்ள நம்பிக்கையே. தாம் முயன்றாலும் முன்னேற முடியாது என்று முயற்சியின்றி வாழ்கின்றனர். திருவருட் சிந்தனையுடன் இடையறாது அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபட்டால் ஊழினை வென்று நமது நாட்டை வளமுடைய நாடாக ஆக்கமுடியும். இது உறுதி.

ஆதலால் நாம் அன்றாட வாழ்க்கையில் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பொழுது, நன்றாக ஆலோசனை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழக்கங்கள் சில கால எல்லையில் வழக்கங்களாக மாறும். ஒரு பழக்கம் வழக்கமாக மாறிய பிறகு அந்த வழக்கத்திலிருந்து விடுபடுவதும் கடினம். ஆதலால், பழக்கம், வழக்கமாகும் முன் தீர ஆய்வு செய்து பொருந்தா வழக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிட்டால், ஊழ் உருவாக்கம் பெறுதலைத் தவிர்த்துவிடலாம். கம்பனின் காலம் ஊழ்-விதியின் ஆட்சிக்காலம். ஆயினும், ‘விதிக்கு விதியை’ அறிமுகம் செய்கிறான்.