பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

251



இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்த பொழுது, கிட்கிந்தை அரசிடம் வலிமை வாய்ந்த வானரப்படை இருந்தமையை இராமன் முன் அணிவகுத்து நிரூபணம் செய்கின்றான் சுக்கிரீவன். இராமனும் இலக்குமணனும் வானர சேனையின் அளவையும் ஆற்றலையும் கண்டு பிரமிக்கின்றனர் அல்லது அதிசயிக்கின்றனர்.

கம்பனின் படைப்பில் சுக்கிரீவன் நல்ல பாத்திரம், மிகவும் உத்தமமான பாத்திரம். வாலிக்கும் மாயாவி என்ற அவுணன் ஒருவனுக்கும் போர் மூண்டது. போரிட்டுக் கொண்டே மலையின் குகையில் நுழைந்தனர். பல காலம் வாலி திரும்பவில்லை. வாலியொடு பொருந்திய அவுணனும் வரவில்லை. சுக்கிரீவன், வாலி அந்தப் போரில் மாண்டிருப்பானோ என்று ஐயப்பட்டான். ‘நான் குகைக்குள் சென்று அண்ணனைத் தேடுவேன். அவன் இறந்து விட்டிருந்தால் மாயாவியைத் தேடிச் சென்று அழிப்பேன். அஃது இயலாவிடின் உயிர் விடுவேன்’ என்று குகைக்குள் செல்ல முயன்றான். ஆனால் மற்றவர்கள் அவனுக்குச் சமாதானம் கூறித் தடுத்து அரசாட்சியை ஏற்கச் செய்தனர். வாலியை மாயாவி கொன்றிருந்தால் அவன் குகை வாசல் வழி மேலேறி வருவான் என்று பயந்து மலைகளைக் கொண்டு குகை வாசலை அடைத்து வைத்தனர். எனவே, வாலி வரக் கூடாது என்றோ, வாலியின் ஆட்சியைத் தான் கவர்ந்து கொள்ள வேண்டும் என்றோ சுக்கிரீவன் எண்ணவில்லை. எதிர்பாராமல் வாலி மீண்டும் வந்தபோது, சுக்கிரீவன் ஆட்சி செய்வதைக் கண்டு சினம் கொண்டான்; சுக்கிரீவனை, அடித்து விரட்டினான். சுக்கிரீவன் மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டான். எதிர்பாராமல் நடந்த சம்பவங்களைத் தேர்ந்து தெளிதல் வாலியிடத்தில் இல்லாதது ஒரு குறையே. குற்றமற்ற சுக்கிரீவன் துன்பத்திற்கு ஆளானான். பின் இராமனால் மீட்சி ஏற்பட்டது.