பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

283



போரினால் ஏற்படும் இழப்பு

சண்டை போடுதல் தவறு; தவறு என்று மக்கள் உணர வேண்டும். அதுவும் போர் என்றால் அறவே எதிர்க்க வேண்டும். எந்தப் போரிலும் இருவருக்கு வெற்றி கிடைக்காது. ஒருவர்தான் வெற்றிபெற இயலும். மற்றவர் தோற்பது உறுதி. இதில் பெற்றி பெற்றவரும், மனிதர்தாம்; தோற்றவரும் மனிதர்தாம்! இதில் என்ன வெற்றி தோல்வி வேண்டியிருக்கிறது?


“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்:
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்:
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே:
ஒருவீர் தோற்பினும், தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ்விகலே!"

(புறம் – 45)

என்ற புறநானூற்றுப் பாடல் இங்கு எண்ணத்தக்கது.

போரினால் - போருக்கு முன்பும், போர்க்காலத்திலும், போருக்குப் பின்பும், மக்கள் பல நலன்களை இழக்கின்றனர். நல்வாழ்வு வளரவும், பாதுகாப்புப் பெறவும், அரசுகளையும் ஆட்சிகளையும் அமைத்தனர் மக்கள். போரை விரும்பும் நாடுகளும் அரசுகளும் இதனை மறந்தது ஏன்? இரண்டாவது உலகப்போரின் அழிவு பற்றி,

`It has been calculated, for example, that the resources swallowed up, by the second world war, were enough for building a five - room house for each family in the world and also a hospital in each town with a population of over 5,000 people and to maintain all these hospitals for ten years. Thus,