சங்கத் தமிழர் வாழ்வியல்
19
சங்க காலத்தில் இந்தியா என்ற ஒரு நாடு வலிமை சான்ற ஆட்சி அமைப்பில், தோன்றாது போனாலும் உறவில், கருத்தில் உதவி செய்து கொள்வதில் இந்தியா ஒரு நாடாகிவிட்டது.
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
குன்றுமலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவ துண்டு பகலாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழுதாண்டோர் வழி காவல்”
என்ற பாடல் குறுங்கோழியூர் கிழார் பாடியது. இப்பாடல் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையைப் பாடியது.
இப்பாடலில் தென்குமரி என்று தென்எல்லை குறிப்பிடப் பெறுகிறது. அப்பொழுது குமரியாற்றெல்லையில் கடல் வரவில்லை. வடபெருங்கல் என்பது இமயம். கிழக்கும் மேற்கும் கடல் எல்லை. இப்பரந்த கண்டத்தில் இடையிலுள்ள குன்றுகளும் மலைகளும் காடுகளும் நாடுகளும் அவற்றிடையே வாழ்ந்த மக்களும் ஒருங்கிணைந்து அரசை ஏற்றுக் கொண்டனர். அரசும் திருந்திய அரசு. இக்கருத்தினை,
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப”
என்று மதுரைக் காஞ்சியும் கூறும்.