பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பர்வதத்தின் மூலிகைகளை கொணரச் சொல்கிறான். அனுமன் மூலிகைகளைப் பறிக்கக் காலமாகும் என்று கருதி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றான். அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் காற்றினால் அனைவரும் பிழைத்து எழுந்தனர். மீண்டும் இந்திரசித்து மாயையால் ஒரு மாயா சீதையை தோற்றுவித்துக் கொள்கின்றான். மாயையென்று அறியாமல் சீதையைக் கொல்வதைக் கண்ட அனுமன் அழுதான்: புலம்பினான். தன்னுடைய முயற்சியெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று வருந்துகின்றான். விபீடணன் சீதையின் மரணத்தை நம்புகின்றான். இராமன் சோர்கின்றான். ஆனால் இலக்குமணன் மட்டும் உயிர்த் துடிப்புடன் வீர உணர்வுடன் நிற்கின்றான். சோர்ந்து நிற்கும் இராமனையும் தேற்றிப் போர்புரியத் தூண்டுகின்றான். கற்புத் தெய்வத்தை, யாதொரு துணையும் அற்று விளங்கியவளை இந்திரசித்து தீண்டிக் கொன்றான் என்ற பிறகும் சோர்ந்து நிற்பதா அழகு? நாம் துன்பத்தைச் சுமப்பது ஏன்? பிழைத்திருப்பதற்காகவா? அல்லது அரக்கர்கள் மேலுள்ள கருணையினாலா? உழன்று என்ன பயன்? போர்புரிய வருக! என்று இராமனை அழைக்கின்றான். ‘யாராக இருந்தாலும், நம்மால் மூவுலகையும் அழிக்க இயலும்’ என்கிறான் இலக்குமணன்.

இந்திரசித்து அயோத்தியை அழிக்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மேலும் இராமன் சோர்ந்தான். தன்னைச் சேர்ந்த எல்லோருக்கும் துன்பம் ஏற்பட்டு உள்ளதே என்று உழன்றான். இப்போதும் இலக்குமணன், ‘என்னைப் போன்றவனல்லன் பரதன், இந்திரசித்தின் பிரமபாணத்தால் விழ! பரதன் எமனையும் துணைக்கு அழைத்துப் போராடி இந்திரசித்தை வீழ்த்துவான்! நீ காணலாம்’ என்று மனப் புழுக்கத்துடன் இராமனைத் தேற்றினான். இலக்குமணனுக்கு ஏன் மனப்புழுக்கம்? மலையே நிலை குலைந்ததே என்பதுதான் காரணம்.