பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

57



மனிதன் இயல்பில் கூடி வாழப் பிறந்தவன். ஆனால், பிரிந்தே வாழ்கின்றான். மேலும் மேலும் பிரிந்துகொண்டே செல்கின்றான். ஏன்? அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ மனிதன் தன்னலமே நாடும் பொல்லாத குணத்திற்கு அடிமையாகிவிட்டான். அவனுக்குத் தன் உடைமை, தன் செல்வம், தனது மகிழ்ச்சி ஆகிய உன்மத்தங்கள் மேம்பட்டுவிட்டன. இவைகளுக்கு எதிராக யார் இருந்தாலும் வெறுக்கிறான். வெறுப்பை நியாயப்படுத்த ‘ஊர்’ என்ற மகுடம் சூட்டுகின்றான். அல்லது சாதி, மொழி, இனப் பாகுபாடுகளைத் தோற்றுவித்து அதன் சந்து பொந்துகளில் “தீமையைத் தந்தவர் இவர்; நன்மையைத் தந்தவர் அவர்” என்று கூறிப் பிரிவினையை வளர்ப்பதோடு மட்டுமின்றி, மனித குலத்தின் கேளிர்ப் பண்பைக் கெடுப்ப தோடன்றித் தீமையை எதிர்த்துப் போராடும் சக்தியையும் இழக்கின்றான். ஒருவர் பிறிதொருவருக்குத் தீமை செய்ய முடியாது. அதுபோலவே நன்மையையும் செய்ய முடியாது.

நன்றும் தீதும் அவரவர் வாழ்வின் வழி விளையும் விளைவுகளே! ஒரோ வழி பிறர் செய்வது போலத் தோன்றினாலும் பிறருக்குத் தீமையாயிருந்தனவற்றைக் காயும் தீமையாகவும், நன்மையாக இருக்குமாயின் தாம் மகிழ்ந்த நன்மையின் கைம்மாறாகவும் செய்யப் பெற்றதேயாம், எங்ஙனம் கதிரவனைச் சுற்றி ஞாலம் சுற்றுகிறதோ அது போலவே, அவரவர் செயல்களைச் சுற்றியே அவரவர் வாழ்வு வட்டமிடுகின்றது. இந்த அடிப்படைத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டாலேயே இவர் நமக்குத் தீமை செய்தவர் என்று வெறுத்து ஒதுக்காமல் நட்புப் பூணும் பழக்கம் கால் கொள்ளும். இவர் நமக்கு நன்மை செய்தவரென்று புகழ்ந்து பேசி அவ்வழியில் தீமை தோன்ற வாய்ப்பு இருக்காது. இந்தப்பண்பாட்டு நிலை உருவாகின்ற பொழுதே மனித குலம் வெறுப்பினின்றும் விலகும்; ஆள்வினையில் ஈடுபடும்; அன்பிற் பிணைந்து வாழும்.